பெற்றோரே கவனம்.. ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட 9 வயது சிறுமி.. தொண்டையில் சிக்கியதில் துடிதுடித்து பலி
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெறும் 9 வயதே ஆன சிறுமி ஒருவர் வீட்டில் மகிழ்ச்சியாக நூடுல்ஸ் சாப்பிடும் போது எதிர்பாராத விதமாக அது தொண்டையில் சிக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்த 9 வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் பலரும் திடீர் திடீர் என்று எதிர்பார்க்காத காரணங்களால் உயிரிழக்கிறார்கள். இப்படி கூட உயிரிழப்பு ஏற்படுமா என்று நாம் யோசிக்கும் அளவுக்குக் கூட பல சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதற்கிடையே அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது.. இதில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழப்பு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நூடுல்ஸ் அந்த சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த சிறுமி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அந்த சிறுமி அடிமாலி கரிம்குளத்தில் உள்ள பள்ளிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த ஜோவனா சோஜன் என்று தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி இரவு நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளார். பிறகு மூச்சு விடவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மூச்சுத் திணறல்: அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரது பெற்றோர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமிக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அந்த சிறுமி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி நூடுல்ஸ் சாப்பிடும் போது அது சிறுமியின் தொண்டை அல்லது மூச்சுக் குழாயில் சிக்கியிருக்கலாம் என்றும் இது அந்த சிறுமி மூச்சு விடுவதைத் தடுத்து மரணத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் உடல் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது துல்லியமாகத் தெரிய வரும்.
உயிரிழந்த அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவனம் மக்களே: வீட்டில் குழந்தை இருந்தால் அவர்கள் சாப்பிடும் போது நாம் எந்தளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது. குழந்தைகளைப் பொறுமையாகச் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. சாப்பிடும் போது குழந்தைகளுக்கு எதாவது அசவுகரியம் ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யலாம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.












Click it and Unblock the Notifications