”மதம் மாறியவர்” தனித்தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் எம்எல்ஏ வெற்றி செல்லாது.. நீதிமன்றம் தீர்ப்பு!
கேரளாவில் சிபிஎம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஎம் எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என்று கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித் தொகுதியாகும். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா என்பவர் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பாக டி.குமார் என்பவர் போட்டியிட்டார். இதில் டி.குமாரை விட, இடது முன்னணி சார்பில் போட்டியிட்ட ராஜா 7,848 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலை ரத்து செய்ய மனு
இதனைத் தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த காங். கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் மனுவில், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி ஒரு தனித் தொகுதி ஆகும். இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே இந்த தொகுதியில் போட்டியிட முடியும். மதம் மாறிய பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட தகுதி கிடையாது.

மனுவில் இருந்தது என்ன?
ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாவின் தந்தை அந்தோணியும், தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ராஜாவின் மனைவி ஷைனி பிரியாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். அவர்களது திருமணம் கிறிஸ்தவ மத முறைப்படித் தான் நடந்தது. கிறிஸ்தவ மத முறையின்படித் தான் ராஜா குடும்பத்தினருடன் வாழ்கிறார். ஆனால் இவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜா தரப்பு வாதம்
இதனைத் தொடர்ந்து சிபிஎம் எம்எல்ஏ ராஜாவின் தாத்தா, பாட்டி ஆகியோர் 1951ம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் ராஜா தரப்பில், தான் ஒரு இந்து பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று வாதிட்டார். அதேபோல் தனது தாத்தா மற்றும் பாட்டி நீண்ட காலமாக தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து வந்தனர். அதன் விளைவாகவே எனது தந்தைக்கு கிறிஸ்தவ பெயர் சூட்டப்பட்டது. ஆனால் எனது தாயின் பெயர் எஸ்தர் அல்ல ஈஸ்வரி. எனது பெற்றோர் இருவருமே இந்துக்கள் தான். அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவில்லை என்று தெரிவித்தார்.

கேரளா நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே சிஎஸ்ஐ தேவாலயத்தில் உள்ள குடும்பப் பதிவேடு, ஞானஸ்நானம் பதிவேடு மற்றும் புதைகுழிப் பதிவேடு ஆகியவற்றை நீதிமன்றம் ஆய்வு செய்தது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணையில் மதம் மாறிய ராஜா தனி தொகுதியில் போட்டியிட தகுதி இல்லாதவர் என்றும், தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று தீர்பளித்துள்ள நிலையில் தேவிகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications