"சக்சஸ்".. களமிறங்கிய ஆர்மி.. கேரள மலையில் சிக்கிய இளைஞர் வெற்றிகரமாக மீட்பு.. பரபரத்த ஆபரேஷன்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காட்டில் மலையில் சிக்கிய இளைஞர் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கேரளா மாநிலம் மலப்புழாவில் இளைஞர் ஒருவர் மலை இடுக்கில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 46 மணி நேர போராட்டத்திற்கு பின் இன்று காலை அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு என்பவர் அங்கு உள்ள குறம்பாச்சி மலைப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் டிரெக்கிங் செல்லும் போது மலைமுகட்டில் சிக்கினார். இதையடுத்து அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

எங்கே?
இவர் கேரளாவில் உள்ள அந்த மலைக்கு தன்னுடைய நபர்களுடன் சென்றுள்ளார். மலைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது அவர் சறுக்கி விழுந்துள்ளார். இதில் அவரின் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சரிந்தபடி வேகமாக மலையில் இருந்து கீழே வந்தவர் அங்கிருந்த முகட்டில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக மலையில் இருந்து மொத்தமாக கீழே விழாமல் இடுக்கில் மாட்டி உயிர் பிழைத்தார்.

எப்படி ?
கடந்த 7ம் தேதி இவர் மலை முகட்டில் சிக்கிய நிலையில் அவரை மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வந்தன. பல்வேறு குழுக்கள் இவரை மீட்க முயன்று தோல்வி அடைந்தன. முதலில் உள்ளூர் வாசிகள் இவரை மீட்க முயன்றனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் இவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் இவரை மீட்க போதுமான உபகரணங்கள் இல்லை. இதனால் தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்பட்டது.

கேரளா மலை
ஆனால் தேசிய பேரிடர் மீட்பு படை வந்தும் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. இதனால் கடலோர காவல் படை மற்றும் கடற்படை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஹெலிகாப்டரை கொண்டு வந்தும் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அவர் இருந்த இடத்திற்கு அருகே ஹெலிகாப்டர்கள் செல்ல முடியவில்லை. இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மலையில் சிக்கிய இளைஞர்
இந்த நிலையில் இந்திய ராணுவம் இதற்காக அழைக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து இந்திய ராணுவ வீரகேரல் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் மலையேற சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் கயிறுகள் மூலம் பாபு இருக்கும் இடுக்கிற்கு சென்று உணவு வழங்கினார். 9.30 மணிக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து 10 மணிக்கு அவரின் உடலில் கயிறு கட்டி தூக்கப்பட்டது.
Recommended Video

மீட்பு
அவரை இன்னொரு ராணுவ வீரர் பாதுகாப்பாக பிடித்தபடி இருந்தார். தற்போது 46 மணி நேர போராட்டத்திற்கு பின் பாபு மீட்கப்பட்டு உள்ளார். மலை உச்சிக்கு இவர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இருந்து இவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார். இவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு நாட்களாக இவர் தண்ணீர் குடிக்காமல் இன்று காலைதான் குடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications