தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அமைச்சர்! அதிகாரிகள் வேடிக்கை! தவறை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்!
திருவனந்தபுரம்: கேரளாவில் அம்மாநில துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளின் கவனக் குறைபாடே இந்த தவறுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் அகமது தேவர்கோவிலை கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

துறைமுகத்துறை
கேரளாவில் தொல்லியல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சராக இருப்பவர் அகமது தேவர்கோவில். இவர் காசர்கோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டதோடு தேசியக் கொடியையும் ஏற்றினார். காசர்கோடு மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றுள்ளதால் அமைச்சர் அகமது தேவர்கோவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தலைகீழாக கொடி
முன்னதாக தேசியக்கொடியை அமைச்சர் தலைகீழாக மாற்றி ஏற்றியதை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூட கவனிக்கவில்லை. தலைகீழாக பறந்துகொண்டிருந்த கொடிக்கு சல்யூட் அடித்து அமைச்சர் உட்பட அரசு உயர் அதிகாரிகளும் மரியாதை செய்தனர். இதனிடையே குடியரசு தின விழா கவரேஜுக்காக சென்றிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கொடி மாற்றி ஏற்றப்பட்டுள்ளதை அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

கவனக்குறைபாடு
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கேரள தொல்லியல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில், ஏற்றப்பட்ட கொடியை இறக்கி சரிசெய்து மீண்டும் ஏற்றி சல்யூட் அடித்தார். குடியரசு தினவிழாவில் பங்கேற்ற அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த நிகழ்வால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர். கீழ்நிலை காவலர் ஒருவரின் கவனக்குறைபாடு அமைச்சரையும், உயர் அதிகாரிகளையும் சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடு
கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் உள்ள 13 மாவட்டங்களிலும் குடியரசு தின விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசுத் தினவிழாவில் கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் தேசிக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications