அடேங்கப்பா.! "25 கோடி" அதிர்ஷ்டம் யாருக்கு? கேரளாவில் படுஜோராக நடக்கும் ஓணம் லாட்டரி விற்பனை
திருவனந்தபுரம்: கேரளாவில் எத்தனையோ லாட்டரி சீட்டுக்கள் விற்பனை ஆனாலும் ஓணம் பண்டிகைக்கு வெளியிடப்படும் பம்பர் பரிசு லாட்டரி சீட்டு பெரும் கவனம் பெறும். அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் 25 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் தொடங்கியது.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை உள்ளது. சிலர் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை லாட்டரி சீட்டுக்கு செலவிட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அனுமதி உள்ளது. தனியார் நிறுவனங்கள் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவது போல கேரள அரசு தரப்பிலும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

கேரள அரசு சார்பிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. விசு பண்டிகை, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேஷ நாட்களுக்கு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை கேரள அரசு விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஓணம் லாட்டரியில் பம்பர் பரிசாக ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவருக்கு அடித்தது. ரூ.25 கோடி பரிசுத்தொகை விழுந்ததால் ஓவர் நைட்டில் ஒபாமா அளவுக்கு நாடு முழுக்க பிரபலம் அடைந்தார்.
அடுத்த சில நாட்களில் முன் பின் தெரியாதவர்கள் கூட தன்னிடம் வந்து உதவி கேட்பதாகவும் நிம்மதி இழந்து விட்டதாகவும் கண்ணீர் வடிக்காத குறையாக அனூப் புலம்பியது எல்லாம் வேறு கதை.. ஆனாலும் ஒரே நாளில் அனூப் வாழ்க்கையை அவர் வாங்கிய லாட்டரி சீட்டு புரட்டி போட்டது. ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் இல்லாததால் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த அனூப், லாட்டரியில் பரிசு அடித்ததால் வெளிநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டு கேரளாவிலே செட்டில் ஆகிவிட்டார்.
கேரளாவில் எத்தனையோ லாட்டரி சீட்டுக்கள் விற்பனை ஆனாலும் ஓணம் பண்டிகைக்கு வெளியிடப்படும் பம்பர் பரிசு லாட்டரி சீட்டு பெறும் கவனம் பெறும். அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சார்பில் 25 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த டிக்கெட் விற்பனை அறிமுகம் ஆன முதல் நாளிலேயே 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

லாட்டரி சீட்டு குலுக்கல் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு ரூ.25 கோடியும், இரண்டாவது பரிசு ரூ.20 கோடி (20 பேருக்கு ஆளுக்கு ஒரு கோடியாக பகிர்ந்து அளிக்கப்படும்) மூன்றாவது பரிசு 50 லட்ச ரூபாய் (20 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும்) வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 67.50 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு, 66.55 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. நடப்பு ஆண்டு கூடுதல் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 90 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் வரை அச்சிட மாநில லாட்டரி துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications