குக்கருக்குள் தங்க நகை.. தெரியாமல் எடைக்கு போட்ட கேரள பெண்.. தமிழக வியாபாரி செய்த செயல்! நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் பழைய பொருட்களை எடைக்கு போடும் போது தெரியாமல் தங்க நகையையும் சேர்ந்து கேரள பெண் எடைக்கு போட்டுவிட்டார். அந்த பொருட்களை வாங்கி சென்ற தமிழகத்தை சேர்ந்த வியாபாரி, பழைய குக்கருக்குள் தங்க நகை இருப்பதை பார்த்து, மீண்டும் அந்த பெண்ணிடமே பத்திரமாக ஒப்படைத்துள்ளார். நகைகளை பத்திரமாக திருப்பி கொடுத்த தமிழக வியாபாரியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மக்கள் மத்தியில் இன்னமும் மனித நேயம், நாணயம், நேர்மை தொலைந்து போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆட்டோவில் பயணி தவறவிட்ட பல லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை பத்திரமாக பயணியிடம் கொண்டு போய் ஒப்படைப்பதாக இருக்கட்டும், ஏடிஎம்மில் யாரோ முன்பின் தெரியாதவர்கள் எடுக்காமல் விட்டு சென்ற பணத்தை பத்திரமாக வங்கியில் ஒப்படைப்பதாக இருக்கட்டும் இன்னமும் மக்களிடையே நேர்மையும் நாணயமும் நீடிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தான் தற்போது கேரளாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு: கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பல வியாபாரிகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். கடைகள் நடத்துவது, வீடு வீடாக சென்று துணிகள், காய்கறிகள் விற்பனை செய்வது உள்ளிட்ட வியாபாரத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டு இருப்பதை பர்க்க முடியும்.
அந்த வகையில் கேரளாவின் கொல்லம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவர், தமிழகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் வீட்டில் கிடந்த பழைய பொருட்களை விற்றுள்ளார். வீட்டில் தேவையில்லாமல் கிடந்த குக்கர் உள்ளிட்ட பொருட்களை பழைய பொருட்களாக எடைக்கு போட்டுள்ளார். இதில், தான் சிறுக சிறுக சேர்த்து வாங்கியிருந்த நகைகளை போட்டு வைத்து இருந்த பழைய குக்கர் ஒன்றையும் நியாபக மறதியில் வியாபாரியிடம் கொடுத்துள்ளார்.
இதனையும் வாங்கி சென்ற தமிழகத்தை சேர்ந்த வியாபாரி மகேஷ், தனது இடத்திற்கு கொண்டு போய் பொருட்களை தரம் பிரித்துள்ளார். அப்போது, குக்கருக்குள் நகைகள் இருந்ததை பார்த்துள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர், பத்திரமாக சுமித்ராவின் வீட்டிற்கே சென்று நடந்த சம்பவத்தை விளக்கி தங்க நகைகளை திருப்பி கொண்டு கொடுத்தார். தங்க நகை பத்திரமாக கிடைத்ததும், சுமித்ரா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
தங்க நகைகளை தெரியாமல் எடைக்கு போட்டாலும், அதைப் பத்திரமாக எடுத்து வைத்த தமிழக வியாபாரி, உரியவரிடம் கொண்டு போய் சேர்த்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. தமிழக வியாபாரி மகேஷின் இந்த செயலை இணையத்தில் நெட்டிசன்களும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications