கேரளாவில் மலர்ந்த தாமரை.. சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் இடம்! இணையமைச்சராக பதவியேற்றார்
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரோஷ் கோபி வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் இன்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்றிருக்கிறார். அதேபோல 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் கேரளாவிலிருந்து ஒரேயோரு எம்பி மட்டும் மத்திய அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இம்மாநிலத்தில் கடந்த 1957லிருந்து நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல்களில் 2024க்கு முன்பு வரை பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் முதல் முறையாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். அதேபோல அவருக்கு மத்திய அமைச்சராவையிலும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
திருச்சூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளரை 74 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ் கோபி தோற்கடித்திருக்கிறார். இந்த வெற்றி மூலம் முதல் முறையாக பாஜக கேரளாவில் காலூன்றியிருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், தென் மாநிலமான கேரளாவில் கிடைத்துள்ள வெற்றி பாஜகவுக்கு ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications