கேரளாவை மீண்டும் கைப்பற்றும் இடதுசாரிகள்.. பினராயி விஜயன், கேகே ஷைலஜா என முக்கிய தலைவர்கள் முன்னிலை
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா என இடதுசாரி முக்கிய தலைவர்கள் முன்னணியில் உள்ளனர்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளைத் தொடர்ந்து தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
கேரளாவில் இடதுசாரி தலைவர்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடதுசாரிகள்
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் உள்ளன. அதில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 இடங்கள் தேவை. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இடதுசாரிகள் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடக் கூடுதல் இடங்களிலேயே முன்னிலை வகித்தது. இன்று முழுவதும் இதே நிலை தொடர்ந்ததால் கேரளாவில் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சி அமைப்பது நிச்சயம்.

அமைச்சர்கள் முன்னிலை
கேரளா முதல்வர் பினராயி விஜயன், சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனும், மட்டன்னூர் தொகுதியில் கேகே ஷைலஜாவும் முன்னிலையில் உள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள் கேரளாவில் முன்னிலையில் உள்ளனர்.

எத்தனை இடங்கள்
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் தற்போது இடதுசாரிகள் கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 58 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கேரளா காங்கிரஸ் (எம்) 6 இடங்களிலும் இதர கூட்டணிக் கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

காங்கிரஸ் பாஜக
அதேபோல, காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல கேரளா காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் இதர கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல நேமம், பாலக்காடு, மஞ்சேஸ்வரம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications