Hema Committee: ஹேமா கமிஷன் அறிக்கையை விட மோகன்லால் முடிவு அதிர்ச்சியா இருக்கு! ஸ்வேதா மேனன்
திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையை விட மோகன்லால், நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுதான் அதிர்ச்சியாக இருக்கிறது என மலையாள நடிகர் சங்கத்தின் புதிய தலைவர் ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரையுலகில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுவதாக பலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில் அதை விசாரிக்க ஹேமா கமிஷனை அந்த மாநில அரசு அமைத்தது.

இந்த கமிஷன் விசாரணையில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் உண்மையானது என கண்டறியப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கலானது. இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பாலியல் குற்றச்சாட்டிற்குள்ளாகினர்.
இதையடுத்து அதன் தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அண்மையில் மலையாள நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் நடந்தது. அதில் முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் தலைவராக வந்துள்ளதால் நடிகைகள் குறித்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஸ்வேதா மேனன் பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், மோகன்லால் இருந்த இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என கேட்டனர்.
அதற்கு அவர் "உண்மையிலேயே எனக்கு ஹேமா கமிஷன் அறிக்கை கொடுத்த அதிர்ச்சியைவிட லாலேட்டன் (மோகன்லால்), நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது" என தெரிவித்திருந்தார்.
மேலும் ஸ்வேதா கூறுகையில், "மோகன்லால் நல்ல தலைமை பண்பு கொண்டவர். அவரின் கீழ் நான் பணியாற்றி இருக்கிறேன். தோல்வியை எளிதாக ஏற்றுக் கொள்ளும் நபர் அவர் கிடையாது. அவர் யாராலோ குறி வைக்கப்பட்டிருக்கிறார் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அதனால்தான் ராஜினாமா என்பது அவராக எடுத்த இயல்பான முடிவு அல்ல" என்று ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications