கேரளாவில் 2 வயது குழந்தைக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
சீனாவையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பரவியது. சீனாவில் தங்கி படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதியானது.

5 பேர்
இதையடுத்து அவர்களுக்கு அந்த மாநிலத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனாக 3 பேரும் கொரோனா வைரஸிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் இத்தாலிக்கு சென்றுவிட்டு கேரளா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இத்தாலிக்கு சுற்றுலா
இவர்கள் பத்தினம்திட்டாவை சேர்ந்தவர்கள். 5 பேரில் 3 பேர் இத்தாலியிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். அந்த குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் ஆகிய 3 பேரும் கடந்த மாதம் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இதில் அவர்கள் இத்தாலிக்கு சென்று உள்ளனர்.

மோசம்
கொரோனா வைரஸ் வேகமாகவும் மோசமாகவும் பரவி வரும் நிலையில் இவர்கள் இத்தாலியில் பல இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். இந்த நிலையில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கொச்சி விமான நிலையத்திற்கு வந்த அவர்கள் தாங்கள் இத்தாலிக்கு சென்றதை தெரிவிக்கவில்லையாம். இதனால் இவர்களை சோதனை நடத்தாமல் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

6ஆவது நபர்
வீட்டுக்கு வந்த அவர்களுக்கு காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மற்ற இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த 5 பேரும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே 6 ஆவதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெற்றோருடன் இத்தாலிக்குச் சென்றுவிட்டு கேரளா திரும்பிய 2 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications