காலியாகி வரும் கொரோனா.. இன்றைய நாள்.. கேரளாவுக்கு மிகக்சிறந்த நாள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 387 என்றும், தற்போது 167 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான்.
அண்மைக் காலமாக கேரளாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. நேற்று முன்தினம் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

மோசமான பாதிப்பு
ஆரம்ப காலத்தில் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவதால் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பாதிப்பை சந்தித்த மாநிலமாக கேரளா இருந்தது. இதனால் இந்தியாவிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதித்த மாநிலமாக கேரளா விரைவிலேயே உருவெடுத்தது.

பின்வரிசைக்கு போனது
ஆனால் எல்லாம் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே. அதன்பிறகு அதாவது ஏப்ரல் பிறந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சிறப்பான சுகாதார நடவடிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்ற கேரளா இன்று டாப் 10 மாநிலங்களில் கடைசி இடத்திற்கு சென்றுவிட்டது. அதேநேரம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன் வரிசைக்கு வந்தன.

ஒரு சதவீதம் உயிரிழப்பு
கேரளாவிலேயே அதிகபட்சமாக காசர்கோட்டில் 166 பேரும் கண்ணூரில் 75 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு பெரும்பாலானோர் குணமாகி உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டும் இது வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 387 பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர்.

ஒருவர் மட்டுமே பாதிப்பு
தற்போதைய நிலையில் 167 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று கேரளாவுக்கு சிறந்த நாளாக அமைந்துள்ளது. ஏனெனில் கேரளாவில் கொரேனாவுக்கு இன்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். கண்ணூரைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதித்து உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகப்படியாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 218 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா இல்லாத கேரளா
கேரளா மிக விரைவாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை கிராமம் முதல் நகரம் வரை மிக வலுவாக உள்ளதே காரணமாகும். அத்துடன் அரசு சொன்னபடி நடந்து கொண்டு சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த. வார இறுதிக்குள் (ஏப்ரல் 18) கொரோனா பாதிக்காத நாளை கேரளா எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உள்ளதால் இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாகவும் கேரளா மாற அதிக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications