உதயமாகிறார் இன்னொரு விஜயதாரணி! காங்கிரசிலிருந்து "பெரிய தலையை" தட்டி தூக்கும் பாஜக!
திருவனந்தபுரம்: மறைந்த, கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பத்மஜா வேணுகோபால் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு பத்மஜா வேணுகோபால் காங்கிரஸை விட்டு வெளியேறக்கூடும் என்று பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2021 இல் நடந்த சட்டசபை தேர்தலில் திருச்சூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றவர் பத்மஜா. இதையடுத்து அப்போது முதலே இதுபோன்ற தகவல் பரவுகிறது. இப்போது அது வேகம் எடுத்துள்ளது. ஒருவகையில் நம்மூர் விஜயதாரணி மாதிரிதான் பத்மஜா பெயரும் அங்கு தொடர்ந்து அடிபடுகிறது. விஜயதாரணி பாஜக போவார் என செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில் கடைசியில் அது நடந்துவிட்டது.

பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் முக்கிய தலைவராவார். அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். இருப்பினும், மாநிலத் தலைமையுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். விஜயதாரணியை போலவே இவரும் காங்கிரசில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று பேசியுள்ளார்.
பெண் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டுமென்றே முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும் கட்சி தாவப்போவதில்லை என்று விஜயதாரணி போலவே இவரும் இதுவரை கூறிவருகிறார். தான் நெருப்பு என்றும் பாஜக தன்னை நெருங்க முடியாது என்றும் சொன்னவர் விஜயதாரணி. அதே பாணியில், காங்கிரஸை விட்டு வெளியேறுவது குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த பத்மஜா, "என்னால் இன்று நடப்பதை பற்றியே ஒழுங்காக சொல்ல முடியாது, நாளை பற்றி நான் எப்படி கூற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக மொத்தம் கேரளக் கரையில் ஒரு விஜயதாரணி உதயமாகிறார்!












Click it and Unblock the Notifications