பிஎம்டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்து பள்ளிக்கு வந்த 10ம் வகுப்பு மாணவர்கள்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முந்தைய பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் ஸ்டண்ட் செய்ய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்து சிக்கலில் மாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களின் இந்த செயல் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பள்ளிகளில் தேர்வு முடிந்த பிறகு வேறு பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்ல இருக்கும் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்துவதை பார்க்க முடியும். தங்கள் பழகிய நாட்களை நினைவுக்கூர்ந்தும் உருக்கமாக பேசி விட்டு கண்ணீருடன் பிரியா விடை பெற்று செல்வார்கள். இதெல்லாம் 90 கிட்ஸ் காலம் வரை அதிகம் பள்ளி, கல்லூரி நாட்களில் பார்த்து இருக்க முடியும்.

பள்ளியின் கடைசி நாளில் போட்டோகிராபரை வரச்சொல்லி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு புகைப்படத்திற்காக ரூ.5, 10 என கொடுத்து மாணவர்கள் பங்கிட்டுக்கொள்வார்கள். டெக்னாலாஜி அபரிமிதமாக வளர்ந்துவிட்ட தற்போதைய நாட்களில் மாணவர்கள் கொண்டாட்டம் என்பது ஆட்டம் பாட்டம், ரீல்ஸ் எடுப்பது என மாறிவிட்டது. இதெல்லாம் எல்லை மீறாமல் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லைதான்.
பிஎம்டபிள்யூ காரில் வந்த மாணவர்கள்
ஆனால், சில இடங்களில் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்கள், பார்வையாளர்களை அதிகம் பெறுவதற்கு மாணவர்கள் சிலர் வரம்பு மீறி நடந்து கொள்வது பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. ஆபத்தை உணராமல் கார்கள் பைக்குகளை எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொள்வதைக் கூட தங்களின் கொண்டாட்டங்களில் ஒன்றாக சில மாணவர்கள் வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் பெற்றோர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக அமைந்துள்ளது.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது. பள்ளி பிரிவு உபசார விழாவிற்காக பிஎம்.டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்து வந்து பள்ளி மாணவர்கள் சிலர் செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பற்றிய விவரம் வருமாறு:- கேரளாவில் பத்தினம் திட்டாவில் ஒரு பள்ளி வளாகத்திற்குள் கடந்த வியாழக்கிழமை பிஎம்.டபிள்யூ கார் அசுர வேகத்தில் சென்றது.
பள்ளி கேட்டை இழுத்து மூடிய செக்யூரிட்டி
புழுதிபறக்க சாகசம் செய்வதும், திடீரென பிரேக் போடுவதும் என சினிமா காட்சிகளை மிஞ்சும் சம்பவம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதைப்பார்த்து ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி கேட்டை நோக்கி அந்த கார் வேகமாக வந்தது. இதனை பார்த்த பள்ளியின் செக்யூரிட்டி கேட்டை இழுத்து மூடினார். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீசார் பிஎம்டபிள்யூ காரில் இருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
2 மாணவர்கள் கைது
விசாரணையில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் சேர்ந்து பிஎம் டபிள்யூ காரை ரூ.2 ஆயிரத்திற்கு வாடகை எடுத்ததும், பேர்வெல் நாளில் காரை சாகசம் செய்து போட்டோஷூட் நடத்தவும் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பிரிவு உபசார விழாவை கொண்டாட பிஎம்டபிள்யூ காரை வாடகைக்கு பிடித்த சம்பவம் பெற்றோரையும் ஆசிரியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications