ஜஸ்ட் மிஸ்.. இரண்டு உதை விட்ட யானை.. நூலிழையில் உயிர் தப்பிய நபர்! பந்திப்பூர்- வயநாடு சாலையில் பரபர
திருவனந்தபுரம்: கேரளாவில் பந்திப்பூர் - வயநாடு நெடுஞ்சாலையில் இருவரை யானை துரத்திய நிலையில், அவர்கள் நூலிழையில் தப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நவீன காலகட்டத்தில் மனித- மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மறுபுறம் சாலைகளிலும் விலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கிறது.

இந்த மனித- மிருக மோதலால் பொருளாதார இழப்புகள் ஒரு பக்கம் என்றால் அதைத் தாண்டி சில நேரங்களில் துரதிருஷ்டவசமாக உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது.
நூலிழையில் எஸ்கேப்: அப்படியொரு சம்பவம் தான் பந்திப்பூர் - வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. அங்கே இருவரை யானை விடாமல் துரத்திய நிலையில், அவர்களிடம் இருந்து நூலிழையில் இருவர் தப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் அந்த இருவரும் யானையைப் புகைப்படம் எடுக்க காரில் இருந்து இறங்கியதாகத் தெரிகிறது. அப்போது யானை திடீரென இருவரையும் துரத்த ஆரம்பித்துவிட்டது. அவர்கள் இருவரும் காருக்குள் ஏற முயலவே அதற்குள் யானை அருகே வந்துவிட்டது. இதனால் காரும் அங்கிருந்து நகரவே.. அவர்கள் இருவரும் அச்சத்தில் ஓட தொடங்குகின்றனர். அவர்கள் இருவரையும் அந்த யானை விடாமல் துரத்துகிறது.
ஜஸ்ட் மிஸ்: அப்போது பின்னால் வந்த ஒருவரால் ஓட முடியவில்லை. ஒரு கட்டத்தில் நிலை தடுமாறும் அவர் சாலை அருகிலேயே தடுமாறி கீழே விழுகிறார். அவர் எழுவதற்குள் யானை அவருக்கு மிக அருகில் வந்துவிட்டது. முதலில் முன்னங்காலைக் கொண்டு அவரை யானை உதைக்க முயல்கிறது. அதன் பிறகு பின்னங்காலைக் கொண்டும் யானை உதைக்க முயல்கிறது.
இருப்பினும், நல்வாய்ப்பாக இரண்டு முறையும் கீழே விழுந்த அந்த நபர் தப்பிவிடுகிறார். பின்னர் அவர் தவிழ்ந்தபடியே அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். அந்த யானையும் அவர்களை விட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடுகிறது. நூலிழையில் அந்த இரு நபர்களும் யானையிடம் இருந்து தப்பியுள்ளனர். இந்த வீடியோ தான் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

யானைகள்: இந்த காலத்தில் காடுகள் இருக்கும் பல பகுதிகளில் நாம் சாலை உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்கிறோம். இதனால் மனித மிருக மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பல சாலைகள் காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும். யானைகள் சாலைக்கு அருகே வந்தாலும் வாகனங்களில் செல்லும் நபர்கள் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. இது தொடர்பா வனத்துறை பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், சிலர் இந்த எச்சரிக்கையைத் துளியும் கண்டுகொள்ளாமல் யானைகளைப் படம் பிடிக்க வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு இறங்குகிறார்கள். இது மிக மிக ஆபத்தான செயலாகும். அதிலும் குறிப்பாக ஒற்றை யானை தனியாக இருக்கும் போது, அதன் அருகே செல்லவே கூடாது. வனத்துறை எச்சரிக்கையை மீறி இதுபோல சிலர் செய்யும் பொறுப்பே இல்லாத செயல்களால் யானைகள் அவர்களைத் தாக்க முற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. எனவே, ஒரு தரப்பினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications