தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று பரப்புரை மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, 'துரந்தர்', 'கேரளா ஸ்டோரி', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற திரைப்படங்கள் பற்றி பேசியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் திருவல்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியிருக்கும் விஷயங்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

திரைப்படங்கள் பற்றி பேசிய மோடி
அவர் பேசியதாவது, "LDF மற்றும் UDF தலைவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்களாகிவிட்டார்கள். 'கேரள ஃபைல்ஸ் ஒரு பொய்', 'காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பொய்', 'துராந்தர் ஒரு பொய்' என்று கூறினார்கள். இப்போதெல்லாம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) மற்றும் பொது சிவில் சட்டம் (UCC) பற்றி பொய்களை பரப்பி வருகிறார்கள். கோவாவில் பல பத்தாண்டுகளாக UCC அமலில் உள்ளது, ஆனாலும் அதைப்பற்றி பொய்களைப் பரப்புகிறார்கள். CAA விஷயத்திலும் இப்படித்தான் செய்தார்கள். இவர்கள் பொய்களைப் பரப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மலையாளத்தில் பேச முடியவில்லை
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவல்லாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தன்னால் மலையாளத்தில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோரினார். "உங்கள் அழகான மொழியான மலையாளத்தில் என்னால் பேச முடியவில்லை என்பதால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இந்தியில்தான் பேசுகிறேன்.
கிராமப்புறங்களில் இருந்து மக்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அவர்கள் என் மொழியைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இது உங்கள் அன்பின் சக்தி.
வாக்குறுதி அளித்த மோடி
இது என் பெரும் அதிர்ஷ்டம். உங்களின் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். கேரள வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து ஒன்றேகால் மடங்கு வளர்ச்சியை அடைவதன் மூலம் நான் இந்த கடனைத் திருப்பிச் செலுத்துவேன் - இதுதான் இன்று நான் கொடுக்கும் வாக்குறுதி.
சபரிமலை விவகாரம்
இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் ஊழல் அரசியல் கேரளத்தின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை நேரடியாகப் பாதிக்கிறது. முதலில், அவர்கள் சபரிமலை கோயிலின் புகழை கெடுத்தார்கள். இன்று, அவர்களால் அது கொள்ளையடிக்கப்படுகிறது. சபரிமலையில் நடக்கும் கொள்ளையில் ஒரு தெளிவான வடிவம் உள்ளது. இவை LDF ஆட்சியின் கீழ் நடைபெறுகின்றன, ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்புடையவை.
LDF இந்த விசாரணையை CBI-க்கு ஒப்படைக்கவில்லை, இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. அதே நேரத்தில், கோயில் தொடர்பான விஷயங்களிலிருந்து விலகியே இருந்த காங்கிரஸ், இப்போது போலித்தன்மை கொண்டதாக, இந்துக்களுக்கு ஆதரவானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications