ஓணம் பம்பர் ரூ. 25 கோடி.. லாட்டரி சீட்டை தர மறுத்த நண்பன் வெட்டிக் கொலை.. கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு கொடுத்து வைத்து இருந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டை திருப்பி தர மறுத்ததால் நண்பர்கள் இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டு கொலையில் போய் முடிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டிற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. அந்த மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. வாராந்திர லாட்டரி டிக்கெட் போக ஒணம், விஷு பண்டிகை, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதில் ஓணம் பண்டிகைக்கு வெளியிடப்படும் லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படுகிறது.

நாட்டிலேயே அதிக பரிசுத்தொகை லாட்டரி டிக்கெட் இதுவேயாகும். இதனால், ஓணம் லாட்டரி டிக்கெட் விற்பனை கேரளாவில் அதிக அளவில் உள்ளது. கேரளா மட்டும் இன்றி தமிழ்நாடு உள்பட எல்லையோர மாநில மக்களும் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இதனால் நடப்பு ஆண்டில் ஒணம் லாட்டரி டிக்கெட்டின் விற்பனை 75 லட்சத்தை தாண்டியது. கேரளாவில் அதிக அளவு விற்பனையான டிக்கெட்டுகள் இதுவேயாகும்.
நேற்று நடைபெற்ற குலுக்கலில் TE 230 662 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை விழுந்தது. வாளையார் பகுதியில் உள்ள ஏஜென்சி ஒன்றில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டை கோவை அன்னூரை சேர்ந்தவர் வாங்கியதாக சொல்லப்படுகிறது. எனினும், இந்த டிக்கெட்டுடன் இவர் தற்போது வரை கேரள லாட்டரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவில்லை. இதனால், டிக்கெட்டை இவர் வேறு யாருக்கும் விற்று விட்டாரா இல்லையா.. என்பது தெரியவில்லை.
இதனால், டிக்கெட் வென்ற அதிர்ஷ்டசாலியை கேரள அரசு தேடிக்கொண்டு இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க கேரளாவில் ஓணம் பம்பர் டிக்கெட்டால் கொலை சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: - கொல்லம் அருகே உள்ள தேவளக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் தேவதாஸ் மற்றும் அஜித். மரம் வெட்டும் தொழிலாளியான இருவரும் ஒரே இடத்தில் பணி புரிந்து வந்துள்ளனர்.
தேவதாஸ் 500 ரூபாய் கொடுத்து 25 கோடிக்கான லாட்டரி டிக்கெட்டை வாங்கி தனது நண்பரான அஜித்திடம் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு கொடுத்துள்ளார். நேற்று குலுக்கல் நடைபெறுவதற்கு முன்பாக லாட்டரி டிக்கெட்டை தருமாறு அஜித்திடம் தேவதாஸ் கேட்டு இருக்கிறார். ஆனால், அஜித்து கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தேவதாசை அஜித் மரம் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே துடித்துடித்து பலியானார். இதையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓணம் லாட்டரியை கொடுக்க மறுத்ததால் நடைபெற்ற கொலை சம்வபம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications