பந்தாவாக BMW - தார் கார்களில் ரேஸ்.. பறிபோன டாக்சி பயணி உயிர்! கதறி அழும் குடும்பம்! கேரளாவில் சோகம்
திருவனந்தபுரம்: மகிந்திரா தார் மற்றும் BMW கார்களுக்கு இடையே திருச்சூர் சாலையில் நடைபெற்ற பந்தயத்தின்போது டாக்சி மீது மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் கோட்டேக்காடு பகுதியில் உள்ள சாலையில் நேற்றிரவு விலை உயர்ந்த பி.எம்.டபிள்யு காருக்கும் மகிந்திரா தார் காருக்கும் இடையே பந்தயம் நடந்து இருக்கிறது.
அதிவேகத்தில் ஒருவரை ஒருவர் முந்தி சென்றுகொண்டிருந்தபோது அதே சாலையில் சென்றுகொண்டிருந்த டாக்சி மீது தார் கார் மோதியது.

ஒருவர் உயிரிழப்பு
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவரின் மனைவி, மகள், பேத்தி மற்றும் டாக்சி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்குள்ளான டாக்சியில் ஒரு குடும்பம் குருவாயூரிலிருந்து இரவு 8:30 முதல் 9 மணிக்குள் இடைப்பட்ட நேரத்தில் அவ்வழியாக சென்று கொண்டிருந்தது.

டாக்சி ஓட்டுநர்
இதுகுறித்து பேசிய டாக்சி ஓட்டுநர், "எங்கள் கார் மீது மோதும் வகையில் ஒரு BMW கார் அதிவேகத்தில் சென்றது. பின்னால் அதே வேகத்தில் மற்றொரு காரும் வருவதை அறிந்து நான் சாலையோரமாக டாக்சியை நிறுத்தினேன். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த தார் கார் எங்கள் மீது மோதியதில் நான் பலத்த காயமடைந்தேன்." என்றார்.

இருவர் கைது
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். BMW வில் தப்பிச்சென்ற மற்றொருவரை சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ரேஸில் ஈடுபட்ட 2 கார்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். ரேஸில் ஈடுபட்ட இருவரும் மது அருந்தி கார்களை ஓட்டியது ரத்த பரிசோதனையில் உறுதியாகி இருக்கிறது.

அதிவேக பயணம்
உயிரிழந்த நபரின் மனைவி இது குறித்து கூறுகையில், "என் கணவர் காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒரு கார் எங்கள் மீது வேகமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. என் கணவர் அசையாமல் அதே இடத்தில் இருந்தார்." என்றார். 2 கார்களும் வேகமாக சென்றதாலேயே விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications