சூடுபிடிக்கும் கேரளாவின் வயநாடு அரசியல் களம்! பேரணியாக சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களுக்கு தேர்தல் தொடங்குகிறது. கேரளாவை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக வயநாடு பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது ராகுல் காந்தி உ.பியின் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இராணியிடம் தோல்வியடைந்த ராகுலுக்கு, கேரளாவின் வயநாடு கை கொடுத்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் வயநாட்டில் ராகுல் களமிறங்கியுள்ளார். இன்று அவர் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். பேரணியில் அவருடன் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றுள்ளார். இது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
அதேபோல ராகுலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி, ஆனி ராஜா வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். எனவே, தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது கேரளாவில் எல்டிஎஃப் எனப்படும் இடது ஜனநாயக முன்னணிதான் ஆட்சியில் இருக்கிறது. சிபிஎம் தலைமையிலான இந்த கூட்டணியில், சிபிஐ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இம்மாநிலத்தில் எப்போதும் காங்கிரசுக்கும், சிபிஎம்-க்கும் இடையேதான் போட்டி இருக்கும்.

அந்த வகையில் ராகுல் காந்தியின் போட்டியை சிபிஐ கடுமையாக விமர்சித்திருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சி பாஜகவைதான் எதிர்க்கிறது எனில் அவர்கள் ஏன் உத்தரப் பிரதேசத்திலும், குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் போட்டியிடக்கூடாது? இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வலுகாக உள்ள கேரளாவில் ஏன் போட்டியிடுகின்றது? என்று சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது.
அதேபோல கேரளாவில் பிரசாரம் செய்யும் ராகுல் யாருக்கு எதிராக பேசப்போகிறார்? என்றும் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது. ஏனெனில், கேரளாவில் பாஜக கிடையாது அப்படி இருக்கையில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சிபிஐக்கு எதிராக ராகுல் பிரசாரம் செய்யப் போகிறாரா? என்றும் சிபிஐ தலைமை கேள்வி எழுப்பியிருக்கிறது. எனவே, கேரளாவின் வயநாடு தொகுதி அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications