தமிழகத்திற்கு 2 நமோ பாரத் ரயில்.. அதுவும் இந்த ரூட்டிலா? நெல்லை பயணிகளுக்கு இனிப்பான நியூஸ்
திருவனந்தபுரம்: வந்தே பாரத் ரயில்களை போலவே சொகுசு வசதிகளுடன் கூடிய "நமோ பாரத் ரயில்கள்" இயக்கப்பட உள்ளன. இதில் கேரளாவுக்கு 10 நமோ பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்றும், அதில் இரண்டு ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. குருவாயூர் டூ மதுரை வரையிலும், கொல்லத்தில் இருந்து திருநெல்வேலி வரையும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - கோவை, சென்னை- பெங்களூர், சென்னை - நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை நவீன வசதிகளை கொண்டதாகவும், முழுவதும் ஏசி வசதி, தானியங்கி கதவு, சொகுசு இருக்கைகள் என பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

இதனால், இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வந்தே பாரத் ரயில்களை போன்ற சொகுசு வசதிகளுடன் வந்தே மெட்ரோ ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறைந்த தொலைவு கொண்ட இரு நகரங்களுக்கு இடையே இந்த நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் இயங்க கூடிய இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. கேரளாவில் பல்வேறு ரூட்களில் மொத்தம் 10 நமோ பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் திரிச்சூருக்கும் நமோ பாரத் ரயில் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தக்வல் வெளியாகியுள்ளது.
அது போக, திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம் வரையிலும், குருவாயூர் டூ மதுரை வரையிலும் நமோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை பொறுத்தரை சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முக்கிய ரூட்களில் இந்த ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாம்.
கொல்லத்தில் இருந்து நெல்லை இடையே தற்போது விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மருத்துவம், தொழில், கல்வி, சுற்றுலா உள்பட பல்வேறு காரணங்களுக்காக அதிக அளவில் இந்த வழித்தடத்தில் மக்கள் பயணிக்கிறார்கள். இதனால், இந்த ரூட்டில் நமோ பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எனினும், ரயில் நிலையங்களில் உள்ள உள்கட்டமைப்புகள் பல்வேறு ரயில் நிலையங்களிலும் ரயில்களை நிறுத்துவது என்பது சவாலாக உள்ளது. தென்மலை - ஆரியங்காவு உள்ளிட்ட பகுதிகளில் வந்தே பாரத் போன்ற ரயில்களை நிறுத்துவதற்கு போதிய வசதி இல்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இந்த வழித்தடங்களில் மெமு மற்றும் பயணிகள் ரயில்கள் மட்டுமே நிறுத்தப்படுகின்றன.
எனவே இந்த ரயில் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. நமோ பாரத் ரயில்களை பொறுத்தவரை ரயிலின் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.30 ஆக இருக்கும். தற்போது குஜராத்தில் புஜ் டூ அகமதாபாத் இடையே நமோ பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 334 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்திற்கு கட்டணமாக ரூ. 430 வசூலிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications