ஐயப்பன் அருளே இதற்கு காரணம்.. நெகிழும் தந்திரி கண்டரரு ராஜீவரு
சபரிமலை: ஐயப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயில் விவகாரத்தில் மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அதே நேரம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை.
இதுதொடர்பாக, சபரிமலை ஐயப்பன் கோயில், தந்திரி கண்டராரூ ராஜீவரு கூறுகையில், ஐயப்பன் ஆசிர்வாதத்தால் தான் மறு சீராய்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம், தீர்மானித்துள்ளது.
பக்தர்களின் மனமுருக்க வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். நீதிமன்ற முடிவால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை ஐயப்பன் காப்பாற்றியுள்ளார்.
ஜனவரி 22ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும் போது, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சபரிமலையில் மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐயப்பனின் சக்திக்கு தலைவணங்குகிறேன். ஆதரவு அளித்த அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இறுதி தீர்ப்பு வரும் வரை பக்தர்கள் தங்களின் பிரார்த்தனையை தொடர வேண்டும். ஐயப்பனின் திருவடிகளை சரணடைந்து வணங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.