சபரிமலைதான் நல்ல வாய்ப்பு.. பயன்படுத்த வேண்டும்.. கேரள பாஜக தலைவரின் பரபர வீடியோ வெளியானது!
சபரிமலை கோவில் பிரச்சனையை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்று கேரள பாஜக தலைவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் பிரச்சனையை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்று கேரள பாஜக தலைவர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. சபரிமலை கோவில் பிரச்சனையை எப்படி அரசியலாக்க வேண்டும் என்று அவர் பேசியது இதில் பதிவாகி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. சபரிமலை கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எங்கு பேசினார் இதை
இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திறந்த போது நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை பேசி இருக்கிறார். அதில் அவர் பாஜக உறுப்பினர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். இதில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது கசிந்து இருக்கிறது. மலையாள சேனல்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

சிறந்த வாய்ப்பு
அதில் கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, இந்த சபரிமலை பிரச்சனைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. இதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்துக்கள் எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு வந்துள்ளனர். அரசால் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியாது.

தெரியவில்லை
நாம் சபரிமலைக்கு சென்றோம். அங்கு நாம் செய்ய வேண்டியதை செய்து வருகிறோம். நாம் இதில் பெரிய வெற்றி அடைந்து இருக்கிறோம். ஸ்ரீஜித் ஐபிஎஸ் அந்த கோவிலுக்குள் பெண்களை அழைத்து செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். வெளி உலகத்திற்கு இது தெரியாது. இன்னும் நாம் இதில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது, என்றுள்ளார்.

தலைமை தந்திரி
சபரிமலை தலைமை தந்திரி என்னிடம் பேசினார். அவர் முதலில் பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிட முடிவெடுத்து இருக்கிறார். அதன்பின் நீதிமன்றத்திற்கு பயந்துள்ளார். நான்தான் பின் நீங்கள் கோவிலை மூடுங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு பாஜகவை தவிர வேறு யாருமில்லை.

நீதிமன்ற அவமதிப்பு
அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பயந்தார். ஆனால் நான்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் எங்கள் மீதுதான் வரும் நீங்கள் துணிந்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன் என்று அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

என்ன விளக்கம்
இந்த நிலையில், இந்த வீடியோவில் பேசப்பட்டு இருப்பது உண்மைதான் என்று கேரளா பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஒப்புக்கொண்டுள்ளார். கோவில் தந்திரிக்கும் சட்ட ரீதியான ஆலோசனைதான் வழங்கினேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications