ஹலோ கல்வித்துறை அமைச்சரா? ‛ஸ்பெஷல் கிளாஸ்’ வைக்கிறாங்க சார்.. போனில் போட்டுக்கொடுத்த மாணவர்!
திருவனந்தபுரம்: ‛‛ஹலோ.. கல்வித்துறை அமைச்சரா? விடுமுறை நாட்களில் எங்களை விளையாட விடுவதில்லை. வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. தயவுசெய்து நீங்கள் தலையிட்டு, எங்களை விளையாட அனுமதிக்க முடியுமா?" என்று 7 ம் வகுப்பு மாணவன் போன் செய்து கல்வித்துறை அமைச்சரிடம் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
விடுமுறை நாட்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதனை மாணவ-மாணவிகள் விரும்புவது இல்லை. இருப்பினும் பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து மாணவ-மாணவிகளும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை எடுக்கின்றன.

தற்போது தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம் என்பதை உணர்ந்து தான் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அதையும் மீறி சில இடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக கூட புகார்கள் வந்தன.
இந்நிலையில் தான் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ் வைப்பதாக கூறி பள்ளி மாணவர் ஒருவர் கல்வித்துறை அமைச்சருக்கே போன் செய்து போட்டு கொடுத்துள்ளார். கேரளாவில் இடதுசாரிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்வராக பினராயி விஜய் உள்ளார். அங்கு கல்வித்துறை அமைச்சராக சிவன்குட்டி உள்ளார்.
திருவனந்தபுரத்தில் தனது அலுவலகத்தில் அமைச்சர் சிவன்குட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன்கால் வந்தது. அதனை எடுத்து சிவன் குட்டி பேசினார். அப்போது எதிர் முனையில் பேசியது ஒரு மாணவர்.. அவர், ‛‛ஹலோ, கல்வித்துறை அமைச்சரா?'' என்று கேட்டார். அதற்கு சிவன் குட்டி, ‛ஆமாம்' என்று பதிலளிக்க.. ‛‛சார் விடுமுறையில் எங்களை விளையாட விடாமல் வகுப்பு நடத்துகின்றனர். இந்த விஷயத்தில் தலையீட்டு எங்களை விளையாட அனுமதிக்க முடியுமா?'' என்று மாணவர் கேட்கிறார்.
அதற்கு அமைச்சர், ‛‛யார்.. எங்கிருந்து பேசுகிறீர்கள்?'' என கேட்க, ‛‛கோழிக்கோடு மாவட்டம் மேப்பயூர் பஞ்சாயத்தில் உள்ள கீழப்பாயூர் ஏயூபி பள்ளியில் இருந்து பேசுகிறேன். என் பெயர் முகமது பர்ஹான். 7 ம் வகுப்பு படிக்கிறேன். ஆனால் நான் பேசினேன் என்று பள்ளியில் சொல்லி விடாதீர்கள்'' என்றார். இதனை கேட்டவுடன் அமைச்சர் சிவன்குட்டி குலுங்கி குலுங்கி சிரித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications