பாம்பின் தலையை பிடித்து அழுத்திய சூரஜ்.. வலி தெரியாதிருக்க உத்ராவுக்கு தூக்க மாத்திரை.. பகீர் தகவல்!
பாம்பின் தலையை பிடித்து அழுத்திய சூரஜ்.. வலி தெரியாதிருக்க உத்ராவுக்கு தூக்க மாத்திரை.. பகீர் தகவல்!
திருவனந்தபுரம்: பாம்பின் தலையை பிடித்து அழுத்தி மனைவி உத்ராவை சூரத் கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்ராவுக்கு வலி தெரியாமல் இருக்க தூக்க மாத்திரைகளையும் அவர் கொடுத்ததாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கு பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த சூரஜ் பத்தினம்திட்டா பகுதியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி கொல்லத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த போது அவரை நாகப்பாம்பு கடித்துவிட்டது. ஆனால் எப்போதும் லேட்டாக எழுந்திருக்கும் சூரஜ் காலையிலேயே வெளியே கிளம்பியுள்ளார். அப்போது உத்ராவின் தாய், மகள் குறித்து கேட்ட போது அவர் இன்னும் தூங்குவதாகவே தெரிவித்துள்ளார்.

உத்ராவை எழுப்ப சென்ற தாய்
ஒரு வேளை உடல் நிலை சரியில்லையோ என நினைத்த அவர் உத்ராவை எழுப்ப சென்றார். அப்போது உத்ரா வாயை திறந்து கொண்டு சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உத்ரா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாம்பு கடி
அதன் பின்னர்தான் அவர் பாம்பு கடித்து இறந்தது தெரியவந்தது. இதையறிந்த சூரஜ் தனது நண்பர்களை அழைத்து கொண்டு வந்து வீட்டில் கப்போர்டில் இருந்த பாம்பை கொன்றுவிட்டார். ஏற்கெனவே ஒரு முறை சூரஜ் வீட்டிலிருந்த போது கட்டு வீரியன் பாம்பு தீண்டியதில் 52 நாட்கள் சிகிச்சை மேற்கொண்ட உத்ரா பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார்.

சர்ப்ப கோபம் என நம்பிய மக்கள்
இதனால் சர்ப்ப கோபமாக (தேடி வந்து குடும்பத்தை பழித் தீர்ப்பது) இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் பேசினர். ஆனால் சில நாட்கள் கழித்து தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர் புகார் கொடுத்ததை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம்பு ஜன்னல் வழியாக வந்ததாகவே சூரஜ் தெரிவித்தார்.

நல்லப்பாம்பு
சில தகவல்களை அடிப்படையாக வைத்து இது கொலையாக இருக்கலாம் என கருதிய போலீஸார் பாம்பை வைத்து சோதனையும் செய்தனர். பொதுவாக நல்லப்பாம்புகள் தானாக கடிக்காது, அதை யாராவது கடிக்க வைத்தாலோ மிகவும் கோபத்தை ஏற்படுத்தினாலோ மட்டுமே கடிக்கும். இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாம்புகள் எப்படி கடிக்கும் என்பதை போலீஸார் சோதனை செய்தனர்.

பாம்பு கடித்த காயம்
உத்ராவின் உடம்பில் பாம்பு கடித்த போது 2.5 செ.மீ. அளவுக்கு காயம் இருந்தது. பாம்பு இயல்பாக கடித்தால் 1.7 முதல் 1.8 செ.மீ. வரை மட்டுமே காயம் இருக்கும் என்பதை போலீஸார் அறிந்தனர். மேலும் அதன் தலையை அழுத்தி பிடித்து கடிக்க வைத்தால் மட்டுமே மேற்கண்ட அளவுக்கு காயம் ஏற்படும் என்பதையும் சோதனை மூலம் அறிந்து கொண்டனர். பாம்பின் தலைப்பகுதியை அழுத்தி பிடிக்கும் போது அதன் தலை விரிவடைந்து இது போன்ற ஆழமான காயங்கள் ஏற்படும்.

அதிக வலி
பாம்பு கடித்தால் மிகவும் அதிக வலியை ஏற்படுத்தும். ஆனால் பாம்பு இத்தனை ஆழமாக கடித்தும் உத்ராவுக்கு எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணையில் உத்ராவுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து தூங்க வைத்து பின்னர் பாம்பை வைத்து சூரஜ் கடிக்க வைத்துள்ளது தெரியவந்தது. இதன் மூலம் சூரஜ்தான் குற்றவாளி என்பதை போலீஸார் நிரூபித்தனர்.

100 சவரன்
திருமணத்தின் போது 10 லட்சம் ரொக்கம், 100 சவரன் நகை, கார், சொத்து ஆகியவற்றை கொடுத்தும் வசதியான வீட்டு பெண்ணான உத்ரா உயிரிழந்துவிட்டால் அத்தனை சொத்துக்கும் தான் அதிபதியாகிவிடலாம் என இது போல் பாம்பை வைத்து கடிக்க வைத்து கொலை செய்துள்ளார். போலீஸாரும் பாம்பு கடித்துவிட்டதை நம்பினால் நாம் தப்பி விடுவோம் என எண்ணியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பேராசை பிடித்த இந்த கொடூரன் போலீஸாரிடம் சிக்கி இன்று ஆயுள் தண்டனைக்குள்படுத்தப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications