இவர் தான் என்னை எதிர்க்கிறாரா? கம்யூனிஸ்ட் வேட்பாளரை பார்த்ததுமே பிரியங்கா காந்தி செய்த செயல்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். தொகுதியில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
2024 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ராகுல் காந்தி ரேபரேலி எம்பியாக தொடர்ந்து வருகிறார்.

தற்போது வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தேர்தல் முடிவுகள் நவம்பர் 23ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திக்கு பதிலாக அவரது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி(எல்டிஃஎப்) சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகரி களமிறங்கி உள்ளார்.பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். தற்போது வயநாடு தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது எதிர்த்து போட்டியிடும் சத்ய மொகரியை அவர்கள் பார்த்தனர். உடனே பிரியங்கா காந்தி அவரை தேடிச்சென்று அவரிடம் கைக்குலுக்கினார். மேலும் சிரித்தபடி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார். பதிலுக்கு அவரும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் பிரியங்கா காந்தியை பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் பாலக்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் மற்றும் அவரது ஆலோசகர் ஷபி பராம்பில் ஆகியோர் எல்டிஃஎப் கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சரினிடம் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். திருமண நிகழ்ச்சியில் சரின் பங்கேற்றபோது இருவரிடம் கைக்குலுக்க சென்றார். ஆனால் அவர்கள் கைக்குலுக்காமல் போனது சர்ச்சையானது.
ஆனால் பிரியங்கா காந்தி அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டுள்ளார். போட்டி என்பது தேர்தலில் தான். மற்றபடி பொதுஇடங்களில் இருவரும் போட்டியாளர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில் பிரியங்கா காந்தி நடந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications