கதவில் "மஞ்சள்".. ரூமை திறந்து பார்த்தால்! அதிர்ந்த போலீஸ்! கேரளாவில் நரபலி தரப்பட்ட தமிழ் பெண் யார்
திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தமிழர். இவரை பற்றிய அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் நடைபெற்ற நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. சாபி என்ற இளைஞரால் 2 பெண்கள் கடந்த 4 மாதங்களில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது.

இவர்களின் பணக்கஷ்டத்தை போக்குவதற்காக இந்த நரபலி நடந்துள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த பத்மம் மற்றும் ரோஸ்லி ஆகிய இருவர்தான் இப்படி நரபலி கொடுக்கப்பட்டது. இதில் பத்மம் கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நரபலியில் கொல்லப்பட்ட பத்மம் தமிழ் பெண் ஆவார்.
சாபி என்ற இளைஞர் மூலம் கொலை செய்யப்பட்ட இந்த பெண் கொச்சியில் ஏலங்குளம் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். தினமும் எர்ணாகுளம் ரயில்நிலையம் வந்து அவர் லாட்டரி டிக்கெட் விற்பனை வேலையாக செய்து வந்துள்ளார். இதில்தான் அவருக்கு சாபி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சாபி, சினிமாவில் நடிக்கவைக்கிறேன், ஆபாச படத்தில் சின்ன காட்சி, அதற்கு 10 லட்சம் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்றுள்ளார்.

பத்மம் பொதுவாக தனியாகவே இருப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர் ஏலங்குளம் பகுதியில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் வசித்து வந்துள்ளார். அது தமிழர்கள் வசிக்கும் இடம். அங்கே வேலை தேடி செல்லும் தமிழர்கள் அங்கேதான் வசித்து வந்துள்ளனர். அவர்களுடன் பத்மம் வசித்து வந்துள்ளார். ஆனால் இவர் யாருடனும் பேச மாட்டார். பெரும்பாலும் தனித்து இருப்பார் அமைதியாக இருப்பார்.
அங்கே சில மாதங்களுக்கு முன் இவர் சேர்ந்து உள்ளார். ஆனாலும் கேரளாவில் 15 வருடங்களாக இவர் இருக்கிறார். இடையில் எங்கேயோ போய்விட்டு வந்தவர், மீண்டும் அதே லாட்ஜில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தங்கி வந்துள்ளார். இவருக்கு ஆன்மீக ஈடுபாடு மிக அதிகம் என்கிறார்கள். ஆன்மீக ரீதியாக எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார். இவரின் ரூம் கதவில் இப்போதும் கூட மஞ்சள் இருக்கிறதாம். காணாமல் போன கடைசி நாளில் கூட கதவிற்கு மஞ்சள் எல்லாம் வைத்து வழிபாடு நடத்தி இருக்கிறார்.

இவரின் லாட்ஜ் ஓனர் பெயர் ஜோசப். இவர்தான் பத்மமிற்கு ரூம் கொடுத்துள்ளார். அதன்பின் பத்மம் சொல்லி சில பெண்களுக்கு அவர் ரூம் கொடுத்துள்ளார். ஆனால் பத்மம் இப்படி அழைத்து வந்த யாரிடமும் பெரிதாக பேசியது இல்லை என்கிறார்கள். பெரும்பாலும் இவர் அமைதியாகவே இருப்பார். 15 வருடம் கேரளாவில் இருந்ததால் இவர் நன்றாக மலையாளம் பேசுவார்.
இவரின் சொந்த ஊர் தருமபுரி. இவர் தனது கணவருடன்தான் கேரளாவிற்கு வந்தார். ஆனால் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் தருமபுரிக்கு திரும்பி சென்றுவிட்டார். இதனால் பத்மம் தனியாக வசித்து வந்துள்ளார். கணவனுக்கு இப்போதுதான் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர் காணாமல் போனது பற்றி விசாரித்த போலீசுக்கு வேறு ஒரு அதிர்ச்சி தகவலும் கிடைத்தது. அதன்படி அவரின் ரூமை திறந்து பார்த்து தேடிய போது அதில் இருந்த லாக்கரில் 57 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் நரபலி தரப்பட்டதற்கே 1.20 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கி உள்ளார் சாபி. அப்படி இருக்க இந்த பெண்ணுக்கு 57 ஆயிரம் ரூபாயை கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications