ஆசையாக சாப்பிட்ட சிக்கன் பிரியாணி.. திடீர் வாந்தி, மயக்கம்.. இளம்பெண் துடிதுடித்து மரணம்! பதற்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 20 வயதே ஆன இளம்பெண் ஒருவர் பிரியாணி சாப்பிட்டுக் கொஞ்ச நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்தாண்டு இந்தியாவிலேயே அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி இருந்தது. ஸ்விக்கி, ஜோமேட்டோ என்று இரண்டு தளங்களிலும் பிரியாணி தான் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது மாநிலம் என்று இல்லாமல், நாடு முழுக்க பிரியாணிக்கே ரசிகர்கள் அதிகம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உபி என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்டைல் பிரியாணி கிடைக்கும்.

புட் பாய்சன்
இதன் காரணமாகவே பிரியாணிக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே செல்கிறார்கள். சைவ உணவை உண்பவர்களுக்கும் வெஜிடபிள் பிரியாணி இருக்கிறது. இருப்பினும், சில கடைகளில் தரமான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் சமைப்பதால், அதை உண்ணும் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது.

பிரியாணி
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பெரும்பாலைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீபார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். கேரள ஸ்டைல் பிரியாணியான இந்த குழிமந்தியை அவர் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், இதைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமானது.

வழக்குப்பதிவு
இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அவர் கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர் இருப்பினும். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார், இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள் அளிக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தலையிட்ட கேரள அமைச்சர்
இதற்கிடையே கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும், அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடவடிக்கை
அந்த பெண் எந்த உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்தாரோ அந்த ஹோட்டல்களின் உரிமம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (FSSA) கீழ் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரியாணி சாப்பிட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை
அதேநேரம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை இல்லை.. சமீபத்தில் கட கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் ஒருவர் கோழிக்கோட்டில் உள்ள உணவகத்தில் இருந்து உணவை உட்கொண்டதால் உயிரிழந்தார். உணவகங்கள் தரமற்ற முறையில் உணவைத் தயார் செய்வதே இதுபோன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications