மூணாறு சுற்றுலா.. தேனிமலை உச்சியில் 22 ஜீப்களில் சாகச சுற்றுலா.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்
தேனி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராமக்கல்மேட்டில் 22 ஜீப் டிரைவர்கள் சுற்றுலா பயணிகளை மலை உச்சிக்கு சாகச பயணத்துக்கு அழைத்து சென்றுள்ளார்கள் . அப்படி சாகச பயணம் சென்று 40 சுற்றுலா பயணிகளுக்கு, கனமழையால், வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாறியது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மற்றும் தேக்கடி, இடுக்கி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ராமக்கல்மேடு என்ற சுற்றுலாதலத்திற்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுவார்கள். தேனி மாவட்டம் கோம்பையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்றாலும் போக முடியும். இங்குள்ள நான்கு மலை வியூ பாயிண்ட் என்னும் இயற்கை எழில் நிறைந்த பகுதிக்கு சாகச பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாகும்.

இந்த இடம் தேனியில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கம்பத்தில் இருந்து 17 கிலோ தூரத்திலும், நெடுங்கண்டம் தூக்குப்பாலம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலைப்பகுதியிலும் உள்ளது. இங்கு காலையில் சூரியனின் உதயத்தையும், மாலையில் அஸ்தமிப்பதையும் பார்ப்பதற்காக ராமக்கல்மெட்டு மலை உச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 22 ஜீப்களில் நான்கு மலை வியூ பாயிண்ட் மலை உச்சி பகுதிக்கு தமிழகம், கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகளை டிரைவர்கள் சாகச பயணம் அழைத்து சென்றுள்ளார்கள். கரடுமுரடான மலைப்பாதை வழியாக மலை உச்சிக்கு ஜீப்களில் சென்றிருக்கிறார்கள். மேகமூட்டங்கள் தவழ்ந்து சென்ற காட்சியையும், பனிமூட்டம் சூழ்ந்திருந்த மலைப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
இதனிடையே சாகச பயணம் சென்றவர்களுக்கு சாகசத்திற்கு பதில் மிகவும் திரில்லான, அதேநேரம் வாழ்நாளில் அடுத்த நொடி உயிர் பிழைப்போமா என்ற மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளார்கள். அதற்கு காரணம் , இடுக்கி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழையாகும். சாகச பயணம் மேற்கொண்டு ரசித்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாத அளவிற்கு மிக மோசமான கனமழை பெய்துள்ளது. ராமக்கல் மேடு மலைப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்த தண்ணீர் மற்றும் சகதியால் ஜீப்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளும், ஜீப் டிரைவர்களும் மீண்டும் திரும்பி வரமுடியாமல் மலை உச்சியில் உள்ள வனப்பகுதியில் சிக்கி தவித்தனர். இதை அறிந்த அப்பகுதியை மலைக்கிராம மக்கள் அங்கு சென்றார்கள். இதன்பின்னர் தகவல் அறிந்த கேரள மாநில வருவாய்த்துறையினரும், போலீசாரும் மலை உச்சிக்கு விரைந்தனர். பின்னர் அங்கு சிக்கி தவித்த 40 சுற்றுலா பயணிகள், 22 ஜீப் டிரைவர்களை பத்திரமாக மீட்டு ராமக்கல்மெட்டு பகுதிக்கு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, ராமக்கல்மேடு நான்கு மலை வியூ பாயிண்ட் மலைப்பகுதியில் டிரக்கிங் நடத்த கடந்த 2005-ம் ஆண்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தடையை மீறி சுற்றுலா பயணிகளை மலை உச்சிக்கு சாகச பயணத்துக்கு அழைத்து சென்ற 22 ஜீப் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் அதிரடியாக உத்தரவிட்டார். தடை செய்யப்பட்ட பகுதியில் டிரக்கிங் நடத்திய ஜீப் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 ஜீப்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள்.
சாகச பயணம் சென்ற 22 ஜீப் டிரைவர்கள், 40 சுற்றுலா பயணிகள் கனமழையால் திரும்ப முடியாமல் மிகவும் கடுமையான சிக்கலை எதிர்கொண்டனர். நல்ல வேளையாக மலை கிராம மக்கள் கவனித்து அவர்களை மீட்க உதவினர். இல்லாவிட்டால் பெரும் சிக்கலாகி இருக்கும். இதே பகுதியில் உள்ள குரங்கணியில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டு பலர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications