கொடைக்கானல் சுற்றுலா போக ஆசையா.. இந்த வார இறுதியில் மிஸ் பண்ணிடாதீங்க.. அடியோடு மாறிக்கிடக்கு
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திடீரென்று சாலையில் பனி மூட்டம் தரையிறங்கியது. இங்கு நீண்ட நாளுக்கு பிறகு பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான வெட்பம் நிலவி வந்த நிலையில், வறண்ட வானிலையே காணப்பட்டது. ஆனால் தற்போது கிளைமேட் அடியோடு மாறி உள்ளது. நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இந்த வார இறுதியில் கொடைக்கானல் செல்வோர் அருமையான கால நிலையை அனுபவிக்கலாம்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதுதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கொடைக்கானலில் சீசன் களைகட்டும்.

அதேபோல் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சுதந்திர தினம், சனிக்கிழமை கோகுலாஸ்டமி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்தார்கள். ஆனால் கொடைக்கானலில் கிளைமேட் அந்த அளவிற்கு அப்போதுஇல்லை. ஏனெனில் போதிய மழை இல்லை.. வறண்ட வானிலையே இருந்ததால் குளிர் ஓரளவே இருந்தது.
அதன்பின்னர் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான வெட்பம் நிலவி வந்தது. அதனை தொடர்ந்து, இன்று காலை அடர்ந்த பனி மூட்டமாகவும் ஒரு சில இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது .குறிப்பாக மூஞ்சிக்கல், கல்லறை மேடு, குறிஞ்சி நகர், பேருந்து நிலையம், ஏரி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
மேலும், பிரதான சாலையில் தரை இறங்கி காணப்படும் மேக மூட்டங்களால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியாவிட்டபடியே மிதமான வேகத்தில் தங்களது வாகனங்களை இயக்கி வருகிறார்கள். கொடைக்கானலில் தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது நீண்ட நாளுக்கு பிறகு பெய்து வரும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கொடைக்கானல் மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனெனில் இனி அடுத்த மூன்று நாளைக்கு கிளைமேட் வேறுமாதிரி இருக்கும். பகலிலேயே பனிமூட்டத்தை காண முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் அடிக்கடி சாரல் மழையையும் காண முடியும். கொடைக்கானல் மலையில் கிளைமேட் அடியோடு மாறிவிடும். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவகையில் கிளைமேட் இருக்கும் என்பதால், இந்த வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் அருமையான கிளைமேட்டை அனுபவிக்கலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.












Click it and Unblock the Notifications