மாலத்தீவு கனவில் மண்.. லட்சத்தீவு சுற்றுலா செல்ல ஆர்வம்.. விமான நிறுவனங்களே வியந்த மேஜிக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பின்னர் லட்சத்தீவு வெகுவாக பிரபலம் அடைந்துள்ளது. மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமரை விமர்சித்த காரணத்தால், மாலத்தீவினை இந்திய மக்கள புறக்கணித்தனர். லட்சத்தீவிற்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்திருக்கிறது.
அண்மையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி அதன்பின்னர் கேரளா வழியாக லட்சத்தீவுக்கு பயணித்து வந்தார். மிக அழகான கடற்கரைகளை கொண்ட லட்சத்தீவு யூனியன் பிரதேசம் என்பதால் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்ற போது, கடலில் நீச்சல் அடித்தது, கடற்கரையை ரசித்தார். இதுபற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டர் அதன் பின்னர் கூகுளில் இந்தியா முழுவதும் அதிகம் தேடப்படும் இடமாக லட்சத்தீவு மாறியது.

இதனிடையே லட்சத்தீவு அருகில் உள்ள நாடான மாலத்தீவு சுற்றுலாவையே பிரதான தொழிலாக கொண்ட நாடு ஆகும். பிரதமர் மோடியின் பயணத்தால் லட்சத்தீவு மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும் என்ற அச்சத்தில் மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியை அநாகரிகமாக விமர்சித்தார்கள். இதனால் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக வெடித்தது. மாலத்தீவை புறக்கணிக்குமாறு சமூகவலைதளங்கள் வாயிலாக இந்தியர்கள் பலர் அழைப்பு விடுத்தனர். அவ்வளவு தான் மாலத்தீவு ஓட்டல்களில் இதுவரை பல ஆயிரம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாடுகள் பட்டிலில் முதலிடத்தில் இருந்த இந்தியர்கள் அப்படியே மாலத்தீவினை கைவிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றது குறித்து செய்த தேவையற்ற விமர்சனத்தால் மாலத்தீவு தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனிடையே மாலத்தீவு ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் இந்தியர்களுக்கு புறக்கணிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இது ஒருபுறம் எனில் இதனிடையே லட்சத்தீவு குறித்து பலரும் தேடி வருகிறார்கள். லட்சத்தீவில் என்ன பேமஸ், லட்சத்தீவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன என்று பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது.இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட லட்சத்தீவு கேரளாவின் கொச்சி அருகே இருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து மட்டுமே லட்சத்தீவின் அகத்தி நகருக்கு விமானம் இயக்கப்படுகிறது. அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே லட்சத்தீவுக்கு 70 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தை இயக்கி வருகிறது. கொச்சி-அகத்தி, அகத்தி-கொச்சி இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது டவுன் பஸ் போல் போய் வருகிறது. பிரதமர் மோடியின் பயணம் காரணமாக, இந்தியர்கள் பலரும் லட்சத்தீவிற்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பலரும் லட்சத்தீவு செல்ல விரும்புகிறார்கள். இதனால் கொச்சியில் இருந்துது லட்சத்தீவின் அகத்தி நகருக்கு செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரையில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது
இதுஒருபுறம் எனல் லட்சத்தீவு சுற்றுலா பயணத்தை அதிகப்படுத்த மத்திய அரசும் ஆர்வம் காட்டியுள்ளது. லட்சத்தீவு பயணத்தை எளிமையாக்குவதற்காக முடிவு செய்துள்ளது. தற்போது லட்சத்தீவு செல்ல வங்கியில் ரூ.200-ஐ செலுத்திவிட்டு, அதற்கான சலானை சமர்ப்பித்து நுழைவுச் சீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும். தற்போது மின்னணு நுழைவுச் சீட்டு இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்பதால் விரைவில் நுழைவுச் சீட்டு எளிதாக கிடைத்துவிடும்.
லட்சத்தீவின் அகத்தி விமான நிலையத்தை பெரிதாக்கவும், மினிக்காய் தீவில் ஏர்பஸ் 320 மற்றும் போயிங் 737 ரக விமானங்கள் வந்து செல்வதற்காக புதிய பசுமை விமான நிலையமும் கட்டப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி விமான நிலையம் அமைக்கப்பட்டால், நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சத்தீவுக்கு நேரடி விமானங்கள் வந்து செல்ல முடியும். அகத்தி, சுஹேலி மற்றும் கமாட் தீவுகளில் நவீன ஓட்டல்கள், ரெசார்ட்டுகள் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications