ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் எப்படி இருக்கும்? வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு வட்டாரங்கள் தகவல்
ஊட்டி: இ-பாஸ் இருந்தால் தான் ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியும் என்று கட்டாயமாக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது வருகிறது. இரண்டு கோடைவாசல் தலங்களுக்கும் ஏராளமானோர் வந்து குவிந்து வருவதால் கடந்த ஒரு மாதங்களாக, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் ஊட்டி, கொடைக்கானலில் கடுமையான போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை... இதனால் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா செல்லும் நிலை இருக்கிறது. இதுவும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக ஒரளவுக்குதான் மக்கள் கூட்டத்தை ஊட்டி மற்றும் கொடைக்கானல் தாங்கும் என்கிற நிலையில், பலரும் படை எடுப்பதால், இரண்டு நகரமுமே சிக்கலை சந்திக்கிறது.
இந்நிலையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலமாக ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அப்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது ஊட்டிக்கு தினமும் சீசன் நேரங்களில் கார், வேன் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வருகின்றன. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5 ஆயிரத்து 620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் ஊட்டியில் இருக்கின்றன. இதுதவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.
கொடைக்கானலை பொறுத்தவரை சீசன் நேரங்களில் 5 ஆயிரத்து 135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2 ஆயிரத்து 100 வாகனங்களும் வருகை தருகின்றன. கொடைக்கானலில் 13 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3 ஆயிரத்து 325 அறைகள் இருக்கின்றன. கொடைக்கானலில் வரும் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. வாகன நிறுத்தமிடம் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன.
'லேக் ஏரியா' பகுதியில் ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே நேற்று உயர்நீதிமன்றம் ஊட்டி கொடைக்கானலுக்கு மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் முறையை கொண்டு வர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. ஊட்டி , கொடைக்கானல் செல்ல கொரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த உத்தரவு எதற்கு என்பதற்கான விளக்கத்தையும் நீதிபதிகள் அப்போது அளித்தனர். இ-பாஸ் வழங்கும் முன்பு, வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்? எத்தனை பேர் வருகின்றனர்? ஒரு நாள் சுற்றுலாவா? அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்றும் இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். உதகையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தினர்,
இ பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டால், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பதை அறிய முடியும். அதன்மூலம் பார்க்கிங் வசதி, சாலை வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த முடியும். இபாஸ் முறை மூலம் சோதனை சாவடிகளில் ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்ய முடியும் என்பதால் இந்த முறைக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது..
முன்னதாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின்போது, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊட்டி,கொடைக்கானல் செல்லும் பொதுமக்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மின்னாளுமை முகமை இந்த இ பாஸ் முறையை கொண்டு வந்தது. அதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்து வந்தனர். இதில்,வாகனம், செல்லும் நபர்கள் எண்ணிக்கை, செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டிருந்தன.
கிட்டத்தட்ட அதே மாடலில் இப்போது இபாஸ் முறையை செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்த தமிழ்நாடு மின்னாளுமை முகமை திட்டமிட்டுள்ளது. இ-பாஸ் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, இதுதொடர்பாக திண்டுக்கல், நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், இ-பாஸ் நடைமுறை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications