கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மது போதையில் இளம்பெண்கள்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கன்னியாகுமரி: இன்றைக்கு இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்களுமே மது போதைக்கு அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இளம் பெண்கள் கூடா நட்பால் மது போதையில் சுற்றுகிறார்கள். சிலர் தவறான வழிகளில் பயணிக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே சிற்றார் நீர்த்தேக்க பகுதியில் மது போதையில் வாலிபர்களுடன் இளம்பெண்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே சிற்றார் நீர்தேக்க பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூலை 5ம் தேதி மாலையில் 3 இளைஞர்களும், 3 இளம்பெண்களும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வந்துள்ளார்கள். அவர்கள் நீர் தேக்க பகுதியை சுற்றி பார்த்து விட்டு அங்கே அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வாலிபர்களும், இளம்பெண்களும் அங்கிருந்து அருகில் உள்ள அரகநாடு பகுதிக்கு சென்றுள்ளார்கள்.

மது போதை
அங்கு மதுபோதையில், சாலையில் வைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் கூட்டாக சேர்ந்து மாறி மாறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியாக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்களாம். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பொதுமக்கள், கடையால் பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸ்
இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்த ஒரு இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். வேறொரு இளம்பெண் அங்கிருந்து நைசாக நழுவி களியல் வந்து பஸ் ஏறி சென்றுள்ளார்கள். இதனிடையே
தொடர்ந்து அங்கு நின்ற 2 இளைஞர்களையும், ஒரு இளம்பெண்ணையும் போலீசார் பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
யார் அந்த இளைஞர்கள்
அப்போது அந்த இளைஞர்கள் மேல்பாலை அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 20 வயதுடையவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications