சட்டை பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணம்! கடைசியில் ரூ.1,000 மட்டும்! அமைச்சர் மூர்த்தி தந்த பரிசு!
மதுரை: அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சை கேட்ட அமைச்சர் மூர்த்தி, டக்கென தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ரூ.1,000 பணத்தை எடுத்து கொடுத்து அந்தச் சிறுமியை ஊக்கப்படுத்தி பாராட்டினார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சுகாதாரத்துறை சார்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அந்த வகையில் மதுரை சக்திமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில், மாணவி ஒருவர் காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள் பற்றி பேசினார்.

இயற்கை உணவின் அவசியம் குறித்தும் அந்த மாணவி எடுத்துரைத்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை அந்த மாணவி பேசிய நிலையில் அதனை முழுமையாக கவனித்த அமைச்சர் மூர்த்தி, சிறுமியை ஊக்கப்படுத்தும் விதமாக தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ரூ.1,000 பணத்தை எடுத்துக் கொடுத்து பாராட்டினார்.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி தனது கையில் 500 ரூபாய் நோட்டுக்களை கத்தையாக வைத்திருந்ததை பார்த்த பார்வையாளர்கள் எவ்வளவு பரிசு கொடுக்கப் போகிறாரோ என ஆவலுடன் எதிர்பார்த்தனர். கடைசியில் அமைச்சரோ ரூ.1,000 மட்டும் வழங்கிவிட்டு பொன்னாடை ஒன்றையும் அந்தச் சிறுமிக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை பரிசு கொடுப்பதற்கு தயங்காதவர். ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று ஜல்லிக்கட்டுகளிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசுகளை பரிசாக கொட்டிக் கொட்டிக் கொடுப்பார். இதனிடையே அமைச்சரை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரும் அசத்தலாக ஆரோக்யம் பற்றி பேசிய அரசுப் பள்ளி மாணவியை பாராட்டினார்.












Click it and Unblock the Notifications