மணாலி ஐஸ் பாறையில் தொழில் அதிபர் போஸ் கொடுத்த வாழ்வின் கடைசி புகைப்படம்.. என்ன நடந்தது?
சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களான சிம்லா மற்றும் மணாலி தற்போது உறைபனி காலம் ஆகும். அங்கு பனிப்பாறைகள் அதிகமாக உள்ளது. இந்த பனிப்பாறைகளை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. அப்படித்தான் ராஜஸ்தானில் இருந்து நிகில் குமார் என்ற தொழில் அதிபர் மணாலி வந்தார். ஐஸ் கட்டி பாறையில் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தவருக்கு அதுதான் கடைசி புகைப்படமாக மாறியுள்ளது..
இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா மற்றும் மணாலி வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற கோடைவாசல் தலங்களாக இருக்கிறது. தென்னிந்தியாவில் எப்படி, ஊட்டி, கொடைக்கானலோ, அதுபோல் வட இந்தியாவில் சிம்லா புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. சிம்லாவை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா நகரம் என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கோடைக்கால தலைநகராகவும் சில காலம் திகழ்ந்தது.
பல புகழ் பெற்ற கல்லூரிகள், ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாகும். இங்குள்ள மலை ரயில் பாதை உலகலப்புகழ் பெற்ற பாரம்பரிய சின்னம் ஆகும்.

பொதுவாக சிம்லாவிற்கும், மணாலிக்கும் எல்லா காலத்திலும் தேனிலவு ஜோடிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதேநேரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மிக அதிக அளவில் வருவார்கள். ஏனெனில் சிம்லா மற்றும் மணாலியில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பனி மழை பொழியும் காலம் ஆகும், பனிச்சறுக்கு விளையாட்டுகள் விளையாடவும், ஐஸ் மலையில் நடக்கவும் பலர் விரும்புவார்கள்.
டிசம்பர் ஜனவரியில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய குளிர்காலம் என்பதால், வெப்பநிலை அதிகபட்சம் 8'C இலிருந்து நிமிடம் 0'C வரை இருக்கும். சில சமயம் மைனசில் கூட வெப்பநிலை வந்துவிடும். சிம்லா மற்றும் மணாலிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி ராஜஸ்தானில் வந்த தொழில் அதிபர், போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரை சேர்ந்த 28 வயதாகும் நிகில் குமார் ஜவுளிக்கடை அதிபர் ஆவார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களுடன் இமாசல பிரதேசம் மாநிலம் குலு-மணாலிக்கு சுற்றுலா சென்றார்.
மணாலியில் உள்ள பனிமலையில் தனது நண்பர்களுடன் ஏறி நிகில் குமார் உற்சாக சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு 'ஐஸ்'கட்டியாக உறைந்து இருந்த சந்திரா ஆற்றங்கரையில் நின்று போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார்.
இதனிடையே தொழில் அதிபர் நிகில் குமாரின் பாரத்தை தாங்காமல் ஐஸ்கட்டி நொறுங்கி உடைந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் நண்பர்கள் கண் எதிரே நிகில் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆற்றில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட நிகில் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். கடுங்குளிர் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தவறி விழுந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் ஆற்றில் நிகில் குமார் உயிரிழந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஐஸ்கட்டி பாறையில் நின்று போஸ் கொடுத்த நிகில்குமாரின் புகைப்படமே அவரது இறுதி புகைப்படமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications