அதுக்கு ஸ்டாலின் தான் கிடைச்சாரா.. இருவரும் ஒரே ஆள் தான்.. திமுக பாஜகவை விமர்சித்த சீமான்
தென்காசி: திமுக பாஜகவை விமர்சிப்பதும், பாஜக திமுகவை விமர்சிப்பதும் அரசியலில் மிகவும் சாதாரணம். ஆனால் அந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்து விமர்சிப்பவர்கள் ஒரு சிலர் தான். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக திமுக பாஜகவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவரும் ஒரே ஆட்கள் தான் என்று சீமான் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இப்போதே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. நாம் தமிழர் தனித்து போட்டி என்று சீமான் கூறிவிட்டார். தவெக தலைமையில் கூட்டணி உருவாக்குவோம் என்று அந்த கட்சி கூறியுள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சங்கரன்கோவில் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் அதிமுகவை இயக்கியதில் தவறு என்ன என்று மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார். இல.கணேசன் இறந்தபோது, இத்தனை பேர் அந்த கட்சியில் இருக்கிறார்கள். ஆளுநர் அவர்களை சார்ந்தவர். எல்.முருகன் இருக்கிறார். மூப்பனார் நினைவேந்தலுக்காக வந்த நிர்மலா சீதாராமனிடம் மலர் வளையத்தை கொடுத்திருக்கலாம். நயினார் நாகேந்திரனிடமோ, அவர்கள் கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்திருக்கலாம்.
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து இல.கணேசனுக்கு மரியாதை செலுத்த வேண்டிய அவசியம் என்ன. இதை எப்படி எடுத்துக் கொள்வது. தம்பி அண்ணனை பாருங்க. எல்லா மாநிலங்களிலும் சாராயம் தொடர்பாக சோதனை நடத்தினார்கள். அங்கு வழக்குப்பதிந்து சிறைபடுத்தியுள்ளனர். இங்கு எத்தனை முறை ரெய்டு நடத்தினார்கள். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை.
அமலாக்கத்துறை ரெய்டு சென்ற இடங்களில் கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ரெய்டு போனது தெரிந்தது. வெளியில் வந்ததும் தெரியவில்லை, நடவடிக்கை எடுத்ததும் தெரியவில்லை ஏன். இதில் இருந்து என்ன தெரிகிறது. இருவரும் ஒரே ஆட்கள் தான். இதைத்தான் காமராஜர் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்வார். அந்த மட்டையை நார் நாராக பிரிப்பது தான் எங்களின் வேலை.
இவர்களுக்குள் என்ன வேறுபாடு கண்டீர்கள். ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக முதன் முதலாக பேரணி நடத்தி, அந்த போரை ஆதரித்தது யார். இந்தியாவில் பாஜக எத்தனை மாநிலங்களில் ஆள்கிறது. அந்த மாநில முதல்வர் கூட செய்யாத வேலையை தமிழ்நாட்டு முதலமைச்சர் செய்தார். அதன் பிறகு தான் டெல்லி முதலமைச்சரே சிந்தூர் போருக்கு ஆதரவு தெரிவித்தார். இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்." என்றார்.












Click it and Unblock the Notifications