சண்டே அதுவுமா படுத்திய வெயில்.. மொத்தமாக குற்றாலம் பக்கம் ஒதுங்கிய கோவை மக்கள்.. கூட்டம் அள்ளுதே
கோவை: கோடை வெப்பம் இப்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், வெப்பத்தைத் தணிக்கப் பொதுமக்கள் பலரும் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குவிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இப்போது கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கிறது.. எப்போதும் மார்ச் மாதம் தான் வெப்பம் அதிகரிக்கும் நிலையில், இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெப்பம் சதமடிக்கவும் ஆரம்பித்தது.

இதற்கிடையே இப்போது கோடைக் காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பல பகுதிகளில் வெப்பம் சதமடித்து இருக்கிறது. குறிப்பாக ஈரோடு, கரூர் பரமத்தி உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
கோவை சுற்றுலா: அதன்படி கோவையிலும் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இப்படி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதாலும் கோடை விடுமுறை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விடுமுறையைக் கழிக்கப் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கோவை குற்றாலத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் கோவை சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். கோடைக் காலம் என்ற போதிலும் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள்: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பயணிகள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் சென்று வர ஏதுவாக கூடுதல் வாகனங்களும் இயக்கப்பட்டன. நீண்ட வரிசை இருந்தாலும் கூட பொதுமக்கள் பொறுமையாக வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒரே நாளில் கோவை குற்றாலத்திற்கு 1000க்கும் மேற்பட்டோர் வந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
குற்றாலம்: கோவை குற்றாலம் அருவி என்பது சிறுவாணி மலைத்தொடர்களில் உள்ள சிறிய நீர்வீழ்ச்சியாகும். இது கோவையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கிறது. இதன் மேற்பகுதியில் தான் சிறுவாணி அணை உள்ளது.
மேலும், இந்த நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், அந்த பகுதிக்கு மாலை 5 மணிக்குப் பின் யாருக்கும் அனுமதி இல்லை. கோவை அருகே அமைந்துள்ள அழகிய நீர்வீழ்ச்சிகளில் இது முக்கியமானது.












Click it and Unblock the Notifications