வெறும் 2 நிமிடத்தில் நடக்கும் மேஜிக்.. தவமே இருக்கணும்.. ஊட்டி, கொடைக்கானல் போகிறவர்களுக்கு ஜாக்பாட்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி தொடங்கி உள்ளது. கொடைக்கானலில் வரும் 18ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்குகிறது.. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தொடர் மழையால் தற்போது கிளைமேட் வேறலெவலில் இருக்கிறது. இ பாஸ் வெறும் 2 நிமிடத்தில் வழங்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நேற்று தொடங்கி வைத்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு நேற்று முதல் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் 6½ லட்சம் மலர் நாற்றுகளும் மலர்ந்து அழகாக காணப்படுகிறது.

ஊட்டி மலர்க்கண்காட்சியினை ஏறக்குறைய 3.50 லட்சம் பேர் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பேட்டி அளித்த தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, ஊட்டி மலர் கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
இ பாஸ் குறித்து ஷிவ்தாஸ் மீனா கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகள் இ-பாஸ் பெறுவது குறித்து எவ்வித தயக்கமும், அச்சமும் வேண்டாம். மிகவும் எளிதான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கும் எளிதான முறையில் இ-பாஸ் பெற்று தரும் வகையில் சோதனை சாவடிகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இ-பாஸ் நடைமுறை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
இ-பாஸ் பெறுவதற்கு எந்தவொரு அலுவலகத்தையோ, அலுவலரையோ அணுக வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் ஆட்டோ ஜெனரேட் முறையில் எளிமையாக இ-பாஸ் கிடைத்து விடும். மிகவும் எளிதான முறையில் இ-பாஸ் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு எந்தவொரு தயக்கமுமின்றி சுற்றுலா தலங்களை பார்வையிட வரலாம். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு தடையும் கிடையாது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களது செல்போன் வாயிலாக கூட இ-பாஸ் பெற்று வருகை தரலாம் என்றார். இதனிடையே வெறும் 2 நிமிடத்தில் இபாஸ் எடுக்க முடிவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மொபைலில் ஜஸ்ட் ஓபன் செய்து போகும் வழியிலேயே இபாஸ் எடுக்க முடியும்.
கொடைக்கானலை பொறுத்தவரை சுற்றுலா பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா வருகிற 17-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

வரும் 17ம் தேதி முதல் 10 நாட்களும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் கொடைக்கானலில் நடத்தப்பட உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பலவித நிறங்களை கொண்ட மலர்களால், நடத்தப்பட உள்ள மலர் கண்காட்சி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். இதுதவிர பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய வீரவிளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல், நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற போகிறது.
கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் டிசம்பர் மாதத்தில் இருப்பது போன்று கிளைமேட் மிக அருமையாக மாறி உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் மேகமூட்டங்களும், பச்சை பசேல் என மரங்களும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.. வெயிலில் காய்ந்து கிடந்த புற்கள் எல்லாம் பச்சை போர்வையாக மாறி உள்ளன. மரங்களே ஆனந்த புன்னகையுடன் காட்சி அளிக்கின்றன.












Click it and Unblock the Notifications