இன்று முதல் திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை..4 நாட்களில் குறைந்த செலவில் "சர்வதேச ஆன்மீக சுற்றுலா"!
சென்னை: தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இன்று முதல் தினசரி விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் பூர்வீக பூமிக்கு குறைந்த நாட்களில், குறைந்த செலவில் எளிதாக 'சர்வதேச ஆன்மீக சுற்றுலா' சென்று திரும்பும் வாய்ப்பும் நமக்கு கிடைத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது திருச்சியில் இருந்து இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலமான யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கும் தினசரி விமான சேவைகளை இயக்குகிறது இண்டிகோ நிறுவனம்.

திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்வதற்கு 1 மணிநேரம்தான். இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளடங்கிய வடக்கு, திருகோணமலையை உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளுக்கு இனி எளிதாக ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.. அது எப்படி என பார்ப்போம்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு 1 மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தை சென்றடைந்துவிடலாம். அதே நாளிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலான, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபடலாம். இதன் பின்னர் சரித்திரப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் கோட்டையை பார்வையிடலாம். அன்று இரவு யாழ்ப்பாணத்தில் தங்கி ஓய்வெடுக்கலாம்.

2-வது நாளாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில்தான் இருக்கும் இலங்கையின் நயினா தீவில் உள்ள நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு படகில் சென்று வழிபாடு நடத்தலாம். அதன் பின்னர் சர்வதேச புகழ் வாய்ந்த யாழ்ப்பாணம் நூலகத்தைப் பார்வையிட்டு பின்னர் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் கோவிலில் தரிசனம் செய்யலாம். 2வது நாளாக யாழ்ப்பாணம்- மன்னார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு திருகோணமலையில் இரவு தங்கலாம்.
3-வது நாளாக, திருகோணமலையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வர் ஆலயம் சிவபெருமானை தரிசித்துவிட்டு திருகோணமலை துறைமுகம், கிண்ணியாவில் உள்ள வெந்நீர் ஊற்றைப் பார்வையிட்டு வற்றப்பலையில் உள்ள கண்ணகை அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். அன்று இரவு பருத்தித்துறையில் தங்கலாம்.

4-வது மற்றும் இறுதி நாளில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சென்றுவிடலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் திருச்சிக்கு திரும்பிவிடலாம். குறைவான நாட்களில் மிகவும் குறைவான செலவில் ஒரு சர்வதேச ஆன்மீக சுற்றுலாவுக்கு தயாராகுங்கள் மக்களே!













Click it and Unblock the Notifications