கொடைக்கானலில் சத்தமில்லாமல் நடக்க போகும் இரண்டு சூப்பர் விஷயம்.. சுற்றுலாத்துறை இயக்குனர் தகவல்
கொடைக்கானல்: 'மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு, தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சமயமூர்த்தி நேற்று வந்தார். இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகிறார்களா?, சுற்றுலா பயணிகள் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார் . அப்போது கொடைக்கானலில் சத்தமில்லாமல் நடக்க போகும் இரண்டு சூப்பர் விஷயம் பற்றியும் விளக்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் 'மலைகளின் இளவரசி’ என போற்றப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலாதலமான கொடைக்கானலில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. கொடைக்கானலில் பார்க்கிங் முதல் குறுகலான சாலை வரை பல்வேறு சவால்கள் உள்ளன.

இந்த சூழலில் இபாஸ் முறையும் இப்போது கடைபிடிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் இ பாஸ் முறையை பொறுத்தவரை, அங்கு எவ்வளவு பேர் காரில் வருகிறார்கள்.. எந்தந்த காலக்கட்டத்தில் வருகிறார்கள் என்ற தகவல்களை சேகரிப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் கொடைக்கானலுக்கு வருவோரின் எண்ணிக்கை குறித்து சரியான புள்ளி விவரங்கள் கிடைத்தால் தான், அங்கு ஏற்படுத்த வேண்டிய கூடுதல் வசதிகள், பார்க்கிங் வசதிகள், சுற்றுலா மேம்பாட்டு வசதிகள், ஓட்டல் வசதிகள் என பல்வேறு வசதிகளை திறம்பட கையாள முடியும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இபாஸ் திட்டம் நீலகிரியை போல் கொடைக்கானலிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சமயமூர்த்தி நேற்று கொடைக்கானல் வந்தார். இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகிறார்களா?, சுற்றுலா பயணிகள் வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு பாஸ்ட்ராக் முறையாக செயல்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே, அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடம் வாகன நிறுத்தம் அமைக்க ஏற்புடையதா? என்பதையும் ஆய்வு செய்தார். ஏனெனில் கொடைக்கானலை பொறுத்தவரை பார்க்கிங் தான் பெரிய பிரச்சனையாக இன்று வரை உள்ளது.
இதனிடையே பேருந்து நிலையத்தை தொடர்ந்து, பிரையண்ட் பூங்கா எதிரே உள்ள அண்ணா பூங்காவை பார்வையிட்டார். ஆய்வின்போது திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, திண்டுக்கல் எஸ்பி பிரதீப் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் வந்தனர். இதைத்தொடர்ந்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சமயமூர்த்தி நடத்தினார். இந்த கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறை இயக்குனர் சமயமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, கொடைக்கானலில் இ-பாஸ் முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் அமைப்பது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்தோம்.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள டீக்கடைகள், உணவகங்களில் கியூஆர்கோடு அமைத்து இ-பாஸ் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம். கொடைக்கானல், நீலகிரியில் தலா 2 இடங்களில் உள்ள அருவிகளையும், மதுரையில் ஒரு இடத்தில் உள்ள அருவியையும் மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம். சுற்றுலா பயணிகளிடம் இ-பாஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை இருக்கிறது.
கொடைக்கானலுக்கு 5 ஆயிரம் பஸ்கள் வருவதற்கு இ-பாஸ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 ஆயிரம் பஸ்கள் மட்டுமே வந்திருக்கிறது. இதேபோல் 21 ஆயிரம் வாகனங்களில் கொடைக்கானலுக்கு வருவதற்கு சுற்றுலா பயணிகள் பதிவு செய்திருந்தனர். ஆனால் சுமார் 9 முதல் 10 ஆயிரம் வாகனங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள். இ-பாஸ் பதிவு செய்து வராத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கிறது. கொடைக்கானலுக்கு இபாஸ் எடுத்துவிட்டு வராததற்கு என்ன காரணம் சில சுற்றுலா பயணிகள் சிலரிடம் கேட்க இருக்கிறோம்.
மேலும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உள்ளூர் பிரமுகர்கள், ஊர்க்காவல் படையினரை கொண்ட கமிட்டி அமைக்க இருக்கிறோம். கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. அப்படி அகற்றப்பட்ட 9 இடங்களில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட இருக்கிறது.
தற்போதைய நிலை கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். தனியார் மூலம் சாகச சுற்றுலா அமைக்கப்பட உள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் இ-பாஸ் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் அடுக்குமாடி வாகன நிற்கும் இடம் அமைப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சமயமூர்த்தி கூறினார்..












Click it and Unblock the Notifications