கொடைக்கானல் குணா குகைக்குள் அத்துமீறிய தமிழக மஞ்சுமெல் பாய்ஸ்.. அந்த நேரம் பார்த்தா வரணும்.. சபாஷ்
கொடைக்கானல்: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து ஆர்வ கோளாறில் கொடைக்கானல் குணா குகைக்கு சென்ற மூன்று இளைஞர்கள், குகைக்கு செல்லும் பாதையில் இரும்பு வேலியை தாண்டி உள்ளே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்கள். அவர்களை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் குணா குகையில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று கொடைக்கானல் வருகின்றனர்.

1821 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அதிகாரி பிஎஸ் வார்டால் என்பவரால் இந்த குணா குகை கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறுகள் சொல்கின்றன. இந்த குகையில் பண்டைய காலத்தவர்கள் சமைத்து சாப்பிட்டு சென்றதாக நம்பப்படுகிறது. அதை வைத்து டெவில்ஸ் கிச்சன் என்று பெயரிட்டார்..
அதாவது பேய்களின் சமையலறை என்று பெயரிட்டார். உலகின் மிக ஆபத்தான குகைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த குகையில் முதன் முதலாக குணா திரைப்படத்தை 1991ல் கமல்ஹாசன் எடுத்தார். சுமார் 700 அடி ஆழத்தில் கயிறுகளை கட்டி கீழே இறங்கி ஷூட்டிங் எடுத்திருக்கிறார். மேலும் குணா குகைக்கு செல்ல பாதையும் உருவாக்கினார்.
இதனிடையே குணா படம் எடுக்கப்பட்ட பின்னர்.. பிரபலம் அடைந்த குகை குணா குகை என்று அழைக்கப்பட்டது.. குணா குகையில் உள்ள ஆபத்தை உணராத பலர், அதில் தவறி விழுந்து இறந்தனர். குகைகளுக்குள் சென்ற பலர் வெளியே வரவே இல்லை, மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். சில சமயங்களில் உடல்களைக் கூட மீட்க முடியவில்லை. ஏராளமான மக்கள் உள்ளே விழுந்து இறந்தனர்.
ஒரு கட்டத்தில் குணா குகை மூடப்பட்ட போதிலும், அதன் அருகே ஒரு ஓட்டை இருந்தது, அதில் தவறி உள்ளே விழுந்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. அதே நேரம் 2006 ஆம் ஆண்டில், கேரளாவின் கொச்சியை சேர்ந்த் மஞ்சுமெல் பாய்ஸ் குழு ஒன்று குகைகளை ஆராயச் சென்றது , அவர்களில் சுபாஷ் என்ற ஒருவர் குழியில் விழுந்தார். பின்னர் அவர் பெரும் முயற்சியால் மீட்கப்பட்டார்.. முக்கியமாக அவரது நண்பர் சிஜு டேவிட் மற்றும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை உதவியால் மீட்கப்பட்டார்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தால் குணா குகை மேலும் பிரபலம் அடைந்ததால், கொடைக்கானல் வருவோரின் எண்ணிக்கையும், குணா குகையை காண வருவோரின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று குணா குகை பகுதியில் வனத்துறையினர் திடீர் ரோந்து சென்றார்கள். அப்போது குணா குகைக்கு செல்லும் பாதையில் இரும்பு வேலியை தாண்டி உள்ளே 3 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக அவர்களை எச்சரித்து மேலே வரவழைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜல்லிக்கல் கிராமத்தை சேர்ந்த பாரத் (வயது 24), அவருடைய நண்பர்களான பையூரை சேர்ந்த விஜய் (24), ராணிப்பேட்டை மாவட்டம் மலமேடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பது தெரியவந்தது. 3 வாலிபர்களும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தை பார்த்து, குணா குகையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தடையை மீறி உள்ளே சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள்.












Click it and Unblock the Notifications