வெறும் 100 ரூபாயில் தங்கலாம் மூணாறில்.. ஏசி பேருந்து ஸ்லீப்பரில்.. அதுவும் சகல வசதிகளுடன்!
மூணாறு: 100 ரூபாய் இருந்தால் கேரளாவில் புகழ் பெற்ற சுற்றுலா தளமான மூணாறில் தங்க முடியும். சுற்றுலா பயணிகள் கேரள அரசு போக்குவரத்து கழக டெப்போவில் 100 ரூபாய் செலுத்தினால் ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் ஓர் இரவு தங்கி கொள்ளலாம். ஒரு படுக்கைக்கு 100 மட்டுமே கட்டணம் என்பதால் தினமும் ஏசி பேருந்துகள் ஹவுஸ்புல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இப்போது கோடை சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்படி வரும் சுற்றுலா பயணிகள் அறை வாடகைக்காக கோடை சீசன் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மிகப்பெரிய கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். மற்ற நாட்களிலும் அறையை பொறுத்து ஓரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடை காலங்களில் சில ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டுமே அறை வாடகைக்கு எடுக்க முடியும் என்கிற நிலை மூணாறில் காணப்படும். ஆனால் கேரள அரசு சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக புதிய திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
இதன்படி மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்த பட்ஜெட்டில் தங்க விரும்பினால் இனி இரவில் தங்க அறைகள் தேடி அலைய வேண்டியதில்லை. மூணாறில் இரவில் நிறுத்திவைக்கப்படும் கேரள அரசின் பஸ்களிலேயே தங்கி ஓய்வெடுக்கலாம். என்னது பேருந்தில் தங்கி கொள்வதா என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? உண்மை தான் புதிய ஏசி பேருந்துகளில் தங்கி கொள்ளலாம்.

கேரள அரசின் ஏசி பேருந்துகளில் ஒரே நேரத்தில் 16 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்களின் உள்ள ஸ்லீப்பர் கோச் மாடலில், கேரள அரசு பேருந்தில் உறங்கும் வகையில்பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. படுக்கை, மொபைல் சார்ஜிங் போர்ட் உள்பட பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ் மூணாறு டெப்போவில் பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும்.
பேருந்தில் தங்க விரும்புபவர்கள் டெப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். அருகில் உணவகங்களும் இருக்கின்றன. இதனிடையே. சுற்றுலா பயணிகள் மலிவு விலையில் தங்க அரசு பஸ்களில் ஏற்பாடு செய்யவும் கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பிஜூ பிரபாகரன் விரும்புகிறார். இதற்கான பணிகள்விரைவில் நடைபெற உள்ளது. மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு முதற்கட்டமாக 2 ஏசி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றிலும் 16 படுக்கைகள் உள்ளன.
இந்த பஸ்களில் சுற்றுலா பயணிகளுக்கு, தினசரி வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன. 2 பஸ்களும் பெரும்பாலான நாட்களில் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த லாட்ஜ் பஸ் வசதி மூலம் கேஎஸ்ஆர்டிசிக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு 100 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது.

கம்பளி போர்வை தேவைப்பட்டால் கூடுதலாக 50 செலுத்த வேண்டும். மூணாறு டெப்போ கவுண்டரில் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். பணம் செலுத்தி விட்டு, மாலை 5 மணிக்கு பஸ்சில் ஏறி படுக்கலாம். காலை 10 மணிக்கு வெளியேறிவிட வேண்டும். 1,600 செலுத்தி முன்பணம் செலுத்தி மொத்த பஸ்சையும் குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புக்கிங் கிடையாது. நேரில் தான் போய் புக்கிங் செய்ய வேண்டும். 5 அல்லது ஆறு பேருந்துகள் இப்போது நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முழு தகவலுக்கு கேஎஸ்ஆர்டிசி மூணாறு டிப்போவின் தொலைப்பேசி எண்ணான 04865230201 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்












Click it and Unblock the Notifications