'கிரேஸி' ஜோ பைடன் - இந்தியா உறவு! பலப்படுமா? பல்ஸ் குறையுமா?
இதோ ஒரு 'உலக நாடகம்' முடிவுக்கு வந்துவிட்டது. டிரம்ப் எய்த பல தடைக்கற்களைத் தாண்டி அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இன்று (ஜன. 20) பதவியேற்கிறார். அமெரிக்க தலைநகரமே இதற்காக விழாக் கோலம் பூண்டுள்ளது.
பதவியேற்பு விழாவின் போது, தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் 25 ஆயிரம், 'நேஷனல் கார்ட்' எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் தான் 'தோல்வி அடைந்து விட்டேன்' என்று ஒப்புக் கொள்ளாத டிரம்ப், ட்விட்டரில் ட்வீட்-டாகவும், US Capitol-ல் 'ஸ்வீட்' - ஆகவும் தாக்குதல் நடத்தி பார்த்துவிட்டார். ஆனால், ம்ஹூம்!.
இப்போது ஏன் 'உலக நாடகம்' என்று சொன்னேன் என புரிகிறதா!
சரி விஷயத்துக்கு வருவோம். இப்போது டிரம்ப் எனும் பெயரை மறந்து ஜோ பைடன் எனும் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாளை விடியற்காலை, அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக நம்மூர் செய்தி சேனல்களில் உச்சரிக்கப்படுவார்.
பைடன் - இந்தியா உறவு
இந்த நேரத்தில் பைடனுக்கும், இந்தியாவுக்குமான உறவு எப்படி இருக்கும், எப்படி இருக்கலாம், எப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பராக் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக பதவி ஏற்பதற்கு முன்பே, அதாவது 2006ம் ஆண்டு அவர் உதிர்த்த ஒரு வாக்கியம், இந்தியா மீதான அவரது பார்வை குறித்தும், இந்தியாவுடனான உறவு குறித்த அவரது எண்ணம் மீதும் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
2006-ல், அதாவது துணை அதிபராக அவர் பதவியேற்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தருணத்தில் அவர், "2020-ம் ஆண்டு உலகில் மிக நெருக்கமான, இணக்கமான நாடுகளில் ஒன்றாக இந்தியா - அமெரிக்கா விளங்கும் என்ற கனவை நான் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல், இந்திய - அமெரிக்க நாடுகள் இடையேயான அணுசக்தி உடன்பாட்டுக்கு அப்போதைய அமெரிக்கா செனட்டர் ஒபாமா ஆதரவு கொடுக்கத் தயங்கினார். ஆனால், எது குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாத பைடன், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்தார். அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
'டேக் இட் ஈஸி' பார்முலாவின் நிகழ்கால சாம்பிளான ஜோ பைடன், துணை அதிபராக இருந்த காலத்தில் தான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.
குறிப்பாக, ஒபாமா - பைடன் நிர்வாகத்தில் தான் 'Major Defense Partner' எனும் 'அதிமுக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடு' என்ற சிறப்பு அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்றது.
இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்னென்ன தெரியுமா?
ராணுவம் சார்ந்த 'advanced and critical technology'-ஐ நம்முடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்வதால், நமது ராணுவ தரம் மிக உயர் நிலையை எட்டும். அதுமட்டுமின்றி, இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பும் பலப்படும். இதன் மூலம், இந்தியாவுக்கு குடைச்சல் கொடுக்க விரும்பும் நாடுகள், நம் நாட்டின் மீது கை வைக்க அஞ்சும்.
அமெரிக்காவின் traditional alliance system-க்கு வெளியே உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, இந்த அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல், 2016ம் ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் Logistics Exchange Memorandum of Agreement-ல் (LEMOA) கையெழுத்திட்டன. இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு ஆழமாக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஜோ பைடன் செயல்பாடு?
"தெற்காசியாவில் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மீது ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜோ பிடன் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
அதேசமயம், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் குறித்தும் அவர் இதுவரை வாய்த் திறக்கவேயில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
பைடனின் செயல்பாடுகளில் இந்த ஒரு விஷயத்தில் இந்தியா சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒருவேளை, இந்த விஷயத்திலும் அவர் 'டேக் இட் ஈஸி' மோடில் இருக்கிறாரோ என்று தெரியவில்லை!.
சீனாவுடனான நிலைப்பாடு:
"இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை ஏற்பட வேண்டும். இதில் சீனா உள்ளிட்ட எந்த நாடுகளும் மற்றவர்களை அச்சுறுத்த முடியாது" என்று பைடன் அவரது பிரச்சார அறிக்கையில் தெரிவித்தது நிச்சயம் புதுடெல்லியின் சூட்டை சற்று தணித்திருக்கும்.
ஆனால், இங்கே லாஜிக் என்னவென்றால், தொழில் ரீதியில், தொழில் நுட்பத்தில், ராணுவ பலத்தில், உலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடன் மல்லுக்கு நிற்கும் சீனாவிற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.
ஆகையால், சீனாவை மையப்படுத்திய எந்த விவகாரமாக இருந்தாலும், இந்தியாவுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமெரிக்க ஆதரவு தரும் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
எச் 1 பி விசா சிக்கல் தீருமா?
டிரம்ப், எச் 1 பி விசா நடைமுறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், இந்திய வர்த்தகத்தில் எதிரொலித்ததை நாம் காண முடிந்தது. அந்த அதிரடி மாற்றங்களுக்கு கூட, டிரம்ப்பை அமெரிக்கர்கள் காப்பாற்றவில்லை என்பது வேறு விஷயம். பாவம் அந்த வலி அவருக்கு மட்டுமே தெரியும்!.
ஆனால், பைடன் இந்த விவகாரத்தில் மாறுபடுவார் என நம்பலாம். ஏனெனில், குடியேற்றத்தை ஆதரிப்பவர்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள். ஸோ, அமெரிக்காவில் படித்து, பணி வாய்ப்புப் பெற்று, அங்கேயே செட்டில் ஆகி ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்படும் இந்தியர்களுக்கு பைடன் ஆட்சி சிவப்புக் கம்பளம் விரிக்கும் என்று நம்பலாம்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் அனைத்து முடிவுகளுக்கும் பைடன் துணை நிற்பார் என்பதைவிட, பில் கிளிண்டன், ஒபாமா போன்ற முன்னாள் அதிபர்கள் போன்று 'அப்படி - இப்படி' என்று சில கருத்துக்களில் முரண்பட்டாலும், இரு நாடுகள் இடையேயான உறவில் எக்காரணத்தை கொண்டும் விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் இந்நாள் அதிபர் பைடன் என்று நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் வீற்றிருக்கும் 'சுதந்திர தேவி' சிலையில் சத்தியம் அடித்துச் சொல்லலாம்.












Click it and Unblock the Notifications