அடுத்த 3 மணிநேரம் முக்கியம்.. 11 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. லிஸ்ட்டில் உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை கிடைக்கிறது.

பல இடங்களில் மழை இல்லாவிட்டால் வெயிலின் அளவு என்பது குறைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பல இடங்களில் குளுகுளு சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தான் தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் அடுத்த 3 மணிநேரத்துக்கு தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாளை மறுநாள் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடுங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications