இதெல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம்.. நாகையில் விட்டு விளாசிய மிக கனமழை! ஒரே நாளில் 111 மிமீ மழை பொழிவு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாளில் 111 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக, நேற்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்தது.
அந்த வகையில் நேற்று காலை முதல் இன்று வரை தொடர் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 111 மிமீ கனமழை பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக காரைக்காலில் 103 மிமீ என்ற அளவில் கனமழை பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "13.11.2023 இன் 08.30 முதல் 14.11.2023 இன் 05.30 வரை (மிமீ) உள்ள தமிழ்நாடு மழைப்பொழிவு தரவு - கண்காணிப்பகங்கள்: நுங்கம்பாக்கம் - 25.0, மீனம்பாக்கம் - 35.5, நாகப்பட்டினம் - 111.0, காரைக்கால் - 103.0, புதுச்சேரி - 98.0, கடலூர் - 87.0, அதிராம்பட்டினம் - 20.0, தஞ்சாவூர் - 9.0, பாம்பன் - 4.0, திருச்சிராப்பள்ளி - 3.0" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்று, "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது." என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications