ரெடியா? அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் மழை வெளுக்கும்.. 15 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் நாளை கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 7 மணி வரை மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications