தெரு தெருவாக ரெய்டு விடுங்க.. களமிறக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள்.. சென்னையில் உள்ளவங்க நோட் பண்ணுங்க
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இவர்கள் சென்னையில் நடைபெறும் பணிகளை கண்காணிப்பார்கள்.
மழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல்பாண்டியன், மேக்நாத்ரெட்டி, உள்ளிட்டோர் நியமனம். பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
மழைக் காலத்தில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் - வானிலை குறித்த தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவது - வெள்ளத் தடுப்புக்கானத் திட்டங்கள் - பணிகளை விரைந்து முடிப்பது - மழைக் காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகள் - அறிவுரைகளை வழங்கினார்கள். விழிப்புணர்வுடன் செயல்பட்டு மழைக்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.
பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களை தயார் நிலையில் வைக்கும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் வர உள்ள மழை காலத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இங்கே கடைசி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கால்வாய்களை தூர்வாருவது, வெள்ள நீர் வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்வது, புதிய அமைப்புகளை கட்டுவது என்று தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டி உள்ளன.
வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் வாரியம், இரயில்வே துறை, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட சேவைத்துறைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
திட்டப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். சாலைகளில் தேங்கும் மழைநீரினை அகற்ற போதுமான அளவில் மோட்டார் பம்புகளை வெளியூர்களிலிருந்து மழை தொடங்குவதற்கு முன்பே கொண்டு வரவேண்டும்.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு தங்கவைப்பதற்கான நிவாரண மையங்களில் சுகாதாரமான முறையில் குடிநீர், பால், பாய், போர்வை போன்ற அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பொழுதே தயார்நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களிலும் நீரேற்று நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும், என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications