தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் அடியோடு மாறுது வானிலை.. 16 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை
சென்னை: தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை சிவகங்கை,புதுக்கோட்டை உள்பட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கேராளவில் கனமழை வெளுத்த வாங்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை: இன்று முதல் 3ம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 23 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் நீலகிரி, கோவைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,கரூர், திருச்சி, அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் மழையால் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது இதேபோல் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாயப்பு உள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications