நவம்பர் 5ம் தேதிக்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்பு!
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.5ம் தேதிக்குள் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் இது தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல மெல்ல, சென்னை நோக்கி நகர்ந்து வந்திருந்தது. அதே நேரம் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றிருந்தது. இதனால் சென்னை, திருவள்ளரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திரா பகுதியிலும் கனமழை பெய்திருந்தது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அலர்ட் காரணமாக ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. குறைந்த நேரத்தில் பெய்த அதிக மழையால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது.

இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவில் கரையை கடந்தது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவம்பரம் 5ம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையும். சில பகுதிகளில் அதிகனமழைக்கான வாய்ப்பு கூட இருக்கிறது எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னைக்கு கண்டம் இருப்பதாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் வங்க கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நோக்கி நகர்ந்தால், மேற்குறிப்பிட்ட பேச்சுகள் மேலும் தீவிரமடைந்துவிடும். இப்போது இருக்கும் சூழலில் சென்னை 20 செ.மீ மழை தாங்கும் அளவுக்கு கட்டுமானத்தை கொண்டிருக்கிறது. ஆனால் புயல் மற்றும் காற்றத்த தாழ்வு மண்டலம் சென்னையை தாக்கும்போது நிச்சயமாக 20 செ.மீக்கு அதிகமாகவே மழை பெய்யும். இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.
கடைசியாக வங்கக்கடலில் டானா புயல்தான் உருவாகியிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையை கடந்தது. எனவே தமிழ்நாட்டுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications