உக்கிரம் காட்டும் கோடை வெயில்.. இன்று ஜில்லென கொட்டப்போகுது மழை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை இன்று அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகிறது. இந்த நிலையில் இன்று முதல் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காற்றழுத்த தாழ்வு பாதை
சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைக்குடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் 22 ஆம் தேதி, 23 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
24-04-2026 மற்றும் 25-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
இன்று முதல் 23-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னையில் இன்று (20-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்" என்று கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications