மழையின் தீவிரம் குறைகிறது.. வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த 4 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மழைக்கு காரணமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும், இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் அது மெல்ல தமிழக கடலோர பகுதியை நோக்கி வரும் என்றும் ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த வகையில், கடந்த 2 நாட்களாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் இன்று டெல்டாவில் துளி கூட மழை இல்லை. அதேபோல, காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதாவது காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி என நகர்ந்து சென்னை பக்கம் போகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப இன்று வட மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அக்.24 வரை ஏற்காடு மலை வழித்தடத்தில் சுற்றுலா மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக அடுத்த ஒரு வாரத்திற்கான மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததாவது, "அக்.23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.24ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.26ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அக்.27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளை (23-10-2025) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications