Rain: நவ.22ல் உருவாகும் புதிய காற்றழுத்தம்! போயும் போயும் சனிக்கிழமைதான் கிடைச்சதா? புயலாக மாறுமா?
சென்னை: நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ள நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பதை தெரிந்து கொள்ளலாம். இது புயலாக மாறுமா என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நவம்பர் 22 ஆம் தேதி புதிய காற்றழுத்தம் வலுப்பெறும். இது 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறும். மேலும் மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரும்.
இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா என்பது போக போகத்தான் தெரியும்.
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. தற்போது குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும். மேலும் நவம்பர் 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று உருவாகும் காற்றழுத்தத்தால் அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமைதான் மழை பெய்யும். விடுமுறை நாளில் மழை பெய்தால் என்ன, பெய்யாட்டி என்ன என்ற நிலைக்கு பள்ளி மாணவர்கள் வந்துவிட்டனர்.
நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ மழையும், நாலுமுக்கு கோடியக்கரையில் தலா 13 செ.மீ மழையும் பெய்துள்ளது. திருக்குவளை காக்காச்சியில் தலா 12 செ.மீ மழையும் நாகை வேளாங்கண்ணியில் தலா 11 செ.மீ மழையும், தலைஞாயிறு திருப்பூண்டி, மாஞ்சோலை, திருத்துறைப் பூண்டியில் தலா 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.
கனமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, வரும் 22ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போதே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications